Friday, September 3, 2010

அண்ணாமலை ரெட்டியார் இயற்றிய காவடிச் சிந்து

அண்ணாமலை ரெட்டியார்

இயற்றிய

காவடிச் சிந்து

சிந்து என்பது இசைத் தமிழ் பாகுபாடுகளில் ஒன்றாகும். அது ஐந்து உறுப்புகளால் ஆன யாப்பு விசேடம். அவை பல்லவி, அநுபல்லவி, மூன்று கண்ணிகள் அடங்கிய சரணம் ஆகும். காவடிச் சிந்து பல்லவியும் அநுபல்லவியும் இன்றிச் சரணங்களுக்குரிய கண்ணிகளை மாத்திரம் பெற்று வரும். முருகனிடம் பிரார்த்தனை செய்து காவடி எடுத்துச் செல்வோர் வழியில் துதி செய்து பாடும் பாடல்களே காவடிச் சிந்து எனப்படுகின்றன. இந்த நூலை இயற்றியவர் அண்ணாமலை ரெட்டியார். இவர் திருநெல்வேலி சங்கர நயினார் கோவிலை அடுத்த சென்னிகுளம் என்னும் ஊரில் 1865 ஆம் ஆண்டு பிறந்தார். திருநெல்வேலி இராமசாமிக் கவிராயரிடம் கல்வி கற்று, பின்னர் ஊற்றுமலை ஜமீந்தார் சுந்தரதாஸ் பாண்டியனின் சமஸ்தான வித்துவானாக விளங்கினார். இவர் நோய் காரணமாக 1891ல், தம் 26ஆம் வயதில் காலமானார்.

1. விநாயகர் துதி


திருவுற் றிலகுகங்க வரையில் புகழ்மிகுந்து
திகழத் தினம்உறைந்த வாசனை, - மிகு
மகிமைச் சுகிர்ததொண்டர் நேசனை, - பல
தீயபாதக காரராகிய சூரர்யாவரும் மாளவேசெய்து
சிகரக் கிரிபிளந்த வேலனை, - உமை
தகரக் குழல்கொள்வஞ்சி பாலனை,
மருவுற் றிணர்விரிந்து மதுபக் குலம்முழங்க
மதுமொய்த் திழிகடம்ப ஆரனை,- விக -
சிதசித்ர சிகிஉந்து வீரனை, - எழில்
மாகநாககு மாரியாகிய மாதினோடுகி ராதநாயகி
மருவப் புளகரும்பு தோளனை, - எனை
அருமைப் பணிகொளும்த யாளனை,
தெரிதற் கரியமந்தி ரமதைத் தனதுதந்தை
செவியில் புகமொழிந்த வாயனை,- இள
ரவியில் கதிர்சிறந்த காயனை,- அகல்
தேவநாடுகெ டாதுநீடிய சேனைகாவல னாகவேவரு
திறலுற்ற சிவகந்த நாதனை,- விரி
மறையத் தொளிருகின்ற பாதனை,
மருளற் றிடநினைந்து மனதிற் களிசிறந்து
மதுரக் கனிவுவந்து கூடவே,- பல
விதமுற் றிலகுசிந்து பாடவே,- விரி
வாரிநீரினை வாரிமேல்வரு மாரிநேர்தரு மாமதாசல
வதனப் பரன்இரண்டு தாளையே - நயம்
உதவப் பணிவம்இந்த வேளையே.


2. முருகன் துதி


சீர்வளர் பசுந்தோகை மயிலான்,- வள்ளி
செவ்விதழ் அலாதினிய தெள்ளமுதும் அயிலான்,
போர்வளர் தடங்கைஉறும் அயிலான் - விமல
பொன்னடியை இன்னலற உன்னுதல்செய் வாமே.

குஞ்சர வணங்கு ஆவல் வீடா - தபடி
கொஞ்சிமரு வும்சரச ரஞ்சிதவி சேடா!
பைஞ்சர வணம்காவல் வீடா - வளரும்
பாலன்என மாலையொடு காலைநினை வாமே.

வல்அவுணர் வழியாதும் விட்டு, - வெருள
வன்சமர்செய் கந்தனிடம் வழியடிமைப் பட்டு
நல்லஉணர் வழியாது மட்டு - மிஞ்சு
ஞானபர மானந்த மோனம் அடை வாமே.

ஒருதந்த மாதங்க முகத்தான், - மகிழ
உத்தம கனிட்டன்என உற்றிடு மகத்தான்,
வருதந்த மாதங்க முகத்தான் - எவரும்
வாழ்த்துகுக நாயகனை ஏத்துதல்செய் வாமே.

3. கழுகுமலை நகர்


தெள்ளுதமி ழுக்குதவு சீலன், - துதி
செப்பணாம லைக்கும் அனு கூலன் - வளர்
செழிய புகழ்விளைத்த கழுகு மலைவளத்தை
தேனே! சொல்லு வேனே.

வெள்ளிமலை யொத்தபல மேடை, - முடி
மீதினிலே கட்டுகொடி யாடை, - அந்த
வெய்யவன் நடத்திவரு துய்யஇர தப்பரியும்
விலகும் படி இலகும்.

வீதிதொறும் ஆதிமறை வேதம், - சிவ
வேதியர்கள் ஓதுசாம கீதம் - அதை
மின்னுமலர்க் காவதனில் துன்னுமடப் பூவையுடன்
விள்ளும், கிள்ளைப் புள்ளும்,

சீதள முகிற்குவமை கூறும் - நிறச்
சிந்துரங்கள் சிந்துமதத் தாறும், - உயிர்ச்
சித்திரம் நிகர்ந்தமின்னார் குத்துமுலைக் குங்குமச்செஞ்
சேறும் காதம் நாறும்.

நித்தநித்த மும்கணவ ரோடும் - காம
லீலையில் பிணங்கிமனம் வாடும் - கரு
நீலவிழி யார்வெறுத்த கோலமணி மாலைரத்னம்
நெருங்கும் எந்த மருங்கும்.

கத்துகட லொத்தகடை வீதி - முன்பு
கட்டுதர ளப்பந்தலின் சோதி - எங்கும்
காட்டுவதால் ஈரிரண்டு கோட்டுமத யானையிற்பல்
களிறும் நிறம் வெளிரும்;

முத்தமிழ்சேர் வித்வசனக் கூட்டம் - கலை
முற்றிலும் உணர்ந்திடும் கொண் டாட்டம் - நெஞ்சில்
முன்னுகின்ற போதுதொறும் தென் மலையில் மேவுகுறு
முனிக்கும் அச்சம் சனிக்கும்.

எத்திசையும் போற்றமரர் ஊரும், - அதில்
இந்திரன் கொலுவிருக்கும் சீரும், - மெச்சும்
இந்தநக ரம்தனை அடைந்தவர்க் கதுவும்வெறுத்
திருக்கும்; அரு வருக்கும்.

துள்ளிஎழும் வெள்ளையலை அடங்கும் - படி
சுற்றிலும் வளைந்த அகழ்க் கிடங்கும் - பல
சொன்னமலை போல்மதிலும் மின்னுவதி னாலேபுகழ்
தோன்றும் லோகம் மூன்றும்.

கள்ளிவிழ் கடப்பமலர் வாகன், - குறக்
கன்னியை அணைக்கும் அதி மோகன் - வளர்
கழுகுமலை நகரின்வள முழுமையும்என் நாவில்அடங்
காதே! மட மாதே.

4. கோயில் வளம்


சென்னி குளநகர் வாசன், - தமிழ்
தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்
செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
தீரன்; அயில் வீரன்.

வன்ன மயில்முரு கேசன், - குற
வள்ளி பதம்பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற
வாதே சொல்வன் மாதே!

கோபுரத் துத்தங்கத் தூவி, - தேவர்
கோபுரத் துக்கப்பால் மேவி, - கண்கள்
கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
குலவும் புவி பலவும்.

நூபுரத் துத்தொனி வெடிக்கும் - பத
நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் - அங்கே
நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என
நோக்கும் படி தாக்கும்.

சந்நிதி யில்துஜஸ் தம்பம், - விண்ணில்
தாவி வருகின்ற கும்பம் - எனும்
சலராசியை வடிவார்பல் கொடிசூடிய முடிமீதிலே
தாங்கும்; உயர்ந் தோங்கும்.

உன்னத மாகிய இஞ்சி,-பொன்னாட்டு
உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக
உயர்வானது பெறலால், அதில் அதிசீதள புயல்சாலவும்
உறங்கும்; மின்னிக் கறங்கும்.

அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம், -பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி
அடைக்கும்; அண்டம் உடைக்கும்.

கருணை முருகனைப் போற்றித்-தங்கக்
காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும்
கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் ஏவரும், இகமேகதி
காண்பார்; இன்பம் பூண்பார்.

5. கழுகுமலை வளம்


பொன்னுலவு சென்னிகுள நன்னகர்அண் ணாமலைதன்
புந்தியில் மகிழ்ந்து நித்தம் நின்றவன் - முந்தி
வெந்திறல் அரக்கர்களை வென்றவன் - மயில்
போல ஏனலின் மீதுலாவுகி ராதமாதுமுன் ஏகியே ".அடி
பூவையே! உனதுதஞ்சம்" என்றவன் - அவள்
ஈயும்மாவி னையும்மென்று தின்றவன்.

மின்னுலவு சொன்னமுடி சென்னியணி விண்ணவர்தே-
வேந்திரனும் சித்தர்களும் துன்னியே, - கதி
வேண்டியே அகத்தில் அன்பு மன்னியே - பணி
வேலவன்கிரு பாகரன்குகன் மேவிடும்கழு காசலம்தனில்
மிஞ்சிய வளங்களை நான் உன்னியே - சொல்ல,
ரஞ்சிதமாக் கேளடிவிற் பன்னியே!

மூசுவண்டு வாசமண்டு காவில்மொண்டு தேனை உண்டு
மோகன முகாரிராகம் பாடுமே; - மைய-
லாகவே பெடையுடனே கூடுமே, - அலை
மோதிவாரிதி நீரைவாரிவிண் மீதுலாவிய சீதளாகர
முகில்பெருஞ் சிகரமுற்றும் மூடுமே; - கண்டு
மயிலினம் சிறகைவிரித் தாடுமே.

தேசுகொண்ட பாரதந்த வீரதும்பி ராசி அண்டர்
தேவதாரு வைக்கரத்தால் பிடிக்குமே; - சுற்றும்
மேவிய கிளையைவளைத் தொடிக்குமே, - ஒளிர்
சேயசந்திர னோடுரிஞ்சுப லாமரங்களி லேநெருங்கிய
திங்கனி, மதுரசத்தை வடிக்குமே, - மந்தி
பாங்கில் நின்று அதனையள்ளிக் குடிக்குமே.

அந்தரம் உருவிவளர்ந் திந்திரன் உலகுகடந்-
தப்புறம்போய் நின்றசையும் சந்தன - மரம்,
தப்பிதமி லாதுகையால் வந்தனம் - எங்கள்
ஆறுமாமுக நாதனுக்கிடு மாறுபோல, விசாலமுற்றகொம்-
பத்தனையும் நின்று தலை சாய்க்குமே; - அண்டப்
பித்திகை தனிலும்சென்று தேய்க்குமே.

கந்தரம் தொறும்கிடந்து கந்தரம் பயந்தொதுங்கக்
கர்ச்சனை புரியும்திறல் சிங்கமே; - நெஞ்சில்
அச்சமுற விண்ணுறைமா தங்கமே - தடங்
காவிலேசில தாவிலேவளர் மாவி றால்நடு வேகிராதர்கள்
கார்முகம் எயும்கணைகள் ஏறுமே; - அதில்
வார்மதுவால் வாரி உவர் மாறுமே.

காலவடி, வேல், நெடிய, வாள், கொடிய நாகம்உமிழ்
காரி, பிணை, வாரி, கணை, பானலே - அன்ன
கூர்நயன வேடமின்னார் ஏனலே - காக்கும்
காலைமேலெறி போதுவார்கவ ணோடுமாமணி தேசுவீசவே
கதிரவன் தனதுமுகம் சுழிக்குமே;- அவன்
குதிரையும் கண் ணைச் சுருக்கி விழிக்குமே.

ஓலமலி கோலநீல வேலைசூழும் ஞாலமீதில்
உற்றவர் இன் பத்துடனே வானமே - செல்ல
வைத்தபல சித்திரசோ பானமே - என்ன
ஓங்குகோங்ககில் நாங்கிலாங்கலி பாங்குநீங்கரு வேங்கைபூங்கழை
ஒன்றோடொன்று வம்புகொண்டு நீளுமே - கோள்கள்
சென்றுசென்று நின்றுநின்று மீளுமே.

6. வாவி வளம்


புள்ளிக் கலாபமயில் பாகன்; - சத்தி
புதல்வ னானகன யோகன்; - மலை
போலத் தான்திரண்ட கோலப் பன்னிரண்டு
வாகன்; நல்வி வேகன்.
வள்ளிக் கிசைந்தமுரு கேசன்; - அண்ணா-
மலைக்கவி ராசன் மகிழ் நேசன்-என்றும்
வாழுங் கழுகுமலை வாவிவளம் சொல்வேன்
மாதே! கேள் இப் போதே.

வெள்ளை நாரைகொத்தும் வேளை, - தப்பி
மேற்கொண்டு எழுந்துசின வாளை - கதி
மீறிப் பாயும்தொறும் சீறிச் சாயும்தென்னம்
பாளை யுடன் தாழை.
தெள்ளும் பிள்ளை யன்னப் பேடும் - இளம்
சேவ லானதுவும் ஊடும்;- பின்பு
தேமலர்த் தவிசில் காமம் முற்றவந்து
கூடும்; உற வாடும்.

மின்னிக் குலவிமதி மானும் - வரி
வெள்ளைப் பணிலராசி தானும்;- மட
மின்னார் விழிகளென்ன மன்னு கெண்டைமுத்தம்
ஈனும் மட மானும்
வன்னத் தாமரையைக் கண்டு - வாயில்
மதுர ராகம்பாடிக் கொண்டு - மதி
மயங்கிப் பேட்டினுடன் முயங்கியே கிடக்கும்
வண்டு, கள்ளை உண்டு.

அந்த ரத்துமின்போல் கூடிக், - கொங்கை-
யாலே நீந்திவிளை யாடிச், - செல்லும்
அந்நல் லார்நடக்கும் நன்ன டைக்குருகி
அன்னம் செல்லும் பின்னம்.
மந்த மேதி உள்ளே எட்டும் - சினை
வராலும் மேலெழுந்து முட்டும் - போது
மடிசு ரந்துகன்று தனைநி னைந்துகண்ட
மட்டும் பாலைக் கொட்டும்.

7. துதி


மரகத விகசித ஒளிதவழ் இருசிறை
மருவிய மயில்மிசை அனுதினம் உறைதரு
வாசன், பவ நாசன்.

சூரகத சுகமணி வளிரதம் நடவிய
குவலய சரதரன் எனும்மத னனும் மகிழ்
கோலன், பரை பாலன்.

பரிபுர அணிகல கலவென ஒலிபுரி
பரிதிஉ தயமதில் அவிழ்மரை மலர்நிகர்
பாதன், குக நாதன்.

திரிபுர மவைஒரு நொடிதனில் எரிகொடு
சிதைவுற நகைபுரி சிவன்மன மகிழ்உப-
தேசன், முரு கேசன்.

பதும நிதியினொடு பணில நிதியும் எழில்
பரவிய சுரபியும் உறுசுர புரன்மகள்
பாகன், கன யோகன்.

சததள நளினத விசுமிசை வதிஒரு
சதுர்முக விதிசிறை யதிலுற நிறுவுவி-
சாகன், தட வாகன்.

குரைதிரை வரைநிரை புரைதர உலவிய
குரவையின் நடுவுற நிருதரை முடுகிய
கோபன், கமழ் நீபன்.

பரைசிவை பகவதி உதவிய சரவண-
பவன்அறு முககுகன் மிசைமது ரிதகவி
பாடும்; சுகம் நாடும்.

8. துதி


பவணக் கிரியதனுள் தானே
மன்னு வானே! - பல
பாழிலே அலை யாமல் இன்புற
நாளுமேயருள் மேவுகண்கொடு
பாராய்!-இன்னல் தீராய்!

அவுணப் பகையைமுடித் தோனே!
புண்ய வானே! - கதி
யாருமேதரு வாருமிங்கிலை
யாதலால் அருள் வாய், இனம்புரி-
யாதே பண்ணும் சூதே.

விரகப் பெருவிதனத் தாலே
மண்ணின் மேலே - மனம்
வீணிலேஉழ லாதுகந்தவி-
சாகனேபுரி, நீயும்வஞ்சம்என்
மீதே எண்ணி டாதே.

நரகச் சமன் வருமப் போதே,
பின் நில்லாதே - பல
நாளுமேமற வாதுநின்சிறு
பாதமாகிய சீதபங்கயம்
நானே உன்னி னேனே.

நிமலப் பெருமிதச்செவ் வேளே!
கன்னல் வேளே - தொடு
நீடுபாணம தால்மருண்டிடை
வாடுமாதரி டங்கொடாவகை
நீயே பண்ணுவாயே.

குமரிக் கதிகபரல் கானே
நண்ணி னானே! - இகழ்
கோதிலாதத போபலம்பெறு
நீதர்பால் அக லாதுறைந்தருள்
கோவே! - என்னுள் வாவே!

கடல்சுற் றிய உலகப் பாலே
மின்னல் போலே - வரு
காயமாகிய தீயவன்பிணி
மேவியேதவி யாமல் அன்பொடு
காவே! - என் ஐ யாவே!

திடமற் றவனினுடைச் சேயே,
என்னை நீயே - திவ்ய
சேவையேசெயும் ஞானபண்டிதர்
நாவினூடு இனி தாவிளைந்திடு
தேனே! பொன்ன னானே!

9. துதி


செந்தில் மாநகர்வாழ் கந்த நாதன்இரு
செய்யபாத கஞ்சமே - நமக்கு
உய்யமேவு தஞ்சமே - இன்று
செப்புவது கொஞ்சமே - கேட்கத்
தீய பாதக விரோகம் மாய விட்டுத்
திரும்பு வாயே நெஞ்சமே!

பந்த பாசம்இதை எந்த வேளையினும்
பார்க்கும்போது தொல்லையே - அல்லால்
ஆர்க்கும் ஆவது இல்லையே - ஒரு
பாரமேரு வில்லையே, - கையில்
பற்று நாதன்மாது பெற்ற நீதன்மீது
பனுவல் சூடு வல்லையே.

மங்கை மார்கள் இரு கொங்கை துங்கமத
வாரணங்கொள் கும்பமே, - முகம்
பூர்ணசந்திர விம்பமே, - பட
மாசுணம்நி தம்பமே, - தொடை
மார வேள் அரசு மண்டபத்தருகில்
வைத்த ரண்டு கம்பமே.

செங்கை சூரியோத யங்கு லாவமலர்
சீதபத்ம தளமே, - வாயில்
ஓதுசொற்கள் குளமே, - இதழ்
திவ்யபொற்ப வளமே,' - என்று
சிந்தித் தால்குமரன் கந்தப் பாதமலர்
சேர்வ தெவ்வா றுளமே?

வன்ன மானவிழி மின்ன வேகடையில்
வக்ர தந்த சிங்கமே - கொண்ட
உக்ரதுங்க சிங்கமே - என்ன
மறலிதூதர் பொங்கமே - உற்று
வந்த வேளை நெஞ்சே கந்த வேளை நினை,
மருவு றாது பங்கமே.

சென்னை மாநகரண் ணாமலைக் கவிஞன்
தேசம் எங்கும் இசையே-பெறப்
பேசுசந்த மிசையே-சற்றும்
தீர்ந்திடாத நசையே-வைத்துச்
சேவ லாளிபதம் ஆவ லோடுபணி
தினமும் நூறு விசையே.

10. சுரம் போக்கு - நற்றாய் இரங்கல்


பாதிராத்திரி வேளையில் வீட்டுப்
பக்கத்தில் வந்து மேவிப் - பஞ்ச
பாதகன் ஒரு பாவி - சிறு
பாவையை மெள்ளக் கூவிக் - கையைப்
பற்றிக் கூட்டிக்கொண் டேகி னான்; பதை
பதைக்குதே என்றன் ஆவி.

சோதனைப்பிர காரமாய் என்னைத்
தொடர்ந்ததே பெருந் தோஷம்! - எவர்
சூதினால் வந்த மோசம்? - இனித்
தொலையுமோ பிள்ளைப் பாசம்? - இதைச்
சுற்றத் தார் அறிந் தால்எனக் குமுன்,
சொல்வரே, பரி காசம்.

தேன் இலங்கிய காவனம் திகழ்
சென்னிமா நகர் வாசன், - துதி
செய்அண்ணா மலை தாசன் - செப்பும்
செந்தமிழ்க் கருள் நேசன், - தினம்
சிந்தனை செய்யும் தொண்டர் தீவினை
தீர்த்திடும் முரு கேசன்.

நானிலம்புகழ் கழுகு மாமலை
நாயகன் பாண்டி நாட்டில், - நெஞ்சில்
நாணம் விட்டுத்தன் பாட்டில், - வெப்பம்
நண்ணிய பாலைக் காட்டில் - மகள்
நடக்க வேண்டிமுன் அடக்க மாய்த்தெய்வம்
லிபித்ததோ மண்டை ஓட்டில்?

மையல்கொண்டொரு பையல் பின்செல
வயது மீறின மாதோ? - இந்த
மார்க்கம் தோன்றின தேதோ? - சென்ம
வாசனைப் பலன் ஈதோ? - ஐயோ!
மாதம் பத்தும் சுமந்து பெற்றஎன்
வயிறும்தான் எரி யாதோ?

செய்யபஞ்சணை யும்பொ றாது
சிவந்து கொப்பளம் ஆகும் - நெரிஞ்-
சிப்பழம் என்று நோகும் - அவள்
சீரடி களும் வேகும் - படி
தீயும் கானலில் காயும் வேனிலாம்
தீயில் எப்படிப் போகும்?

தேடினும்கிடை யாத தாகிய
திரவியக் கரு கூலம் - போலே
செனித்தபெண் ணுக்குச் சீலம் - வேறே
திரும்பின தென்ன காலம்? - கொங்கை
திரண்டி டாமுன்னம் மருண்டி டற்கெவன்
செய்தானோ இந்த்ர சாலம்?

காடுசேர்கையில் கரடி வேங்கைகள்
காட்டுமே ஆர வாரம், - அதைக்
காதில் கேட்கவி சாரம் - வைத்துக்
கலங்குவாள்; அந்த நேரம் - என்றன்
காதலி தன்னை ஆதரித் துயிர்
காப்பது வேலன் பாரம்.

11. தலைவி இரங்கல்


நேம மாய்ப்பணியண் ணாம லைக்குதவு நீதனைக்
கழுகுமலை நாதனை - நெஞ்சில்
நினைக்க நினைக்கமீறி எனைக்கொல் லுதேகாம வேதனை

கோம ளக்கடலி லேமி குத்ததிரைக் கூட்டமே!
மன்மதனும்போ ராட்டமே - செய்து
கோரமே விளைத்தால் தீருமோ எனக்கு வாட்டமே?

வெள்ளத் திரையின்மேலே துள்ளித் திரியும்சுறா மீனமே!
இனியும்உண்டோ மானமே? - கொங்கை
வீக்கம் கொண்டதனால் ஏற்கு தில்லை அன்ன பானமே.

அள்ளற் கழிக்கரையுள் மெள்ளக் குலவிவரும் ஆமையே!
கொடியகாமத் தீமையே - நாளும்
அதிகரித் திடலால் அவமதிக்கு திந்தச் சீமையே.

பொங்கு மதுமலர்கள் எங்கும் பரிமளிக்கும் புன்னையே!
பெற்று வளர்த்த அன்னையே - எந்தப்
போதும் வைதுவைது மோதுகிறாள் பாவி என்னையே.

தங்குநித் திலம்புரி இங்கித வலம்புரிச் சங்கமே!
தென்றலும் ஒரு சிங்கமே - போலத்
தாக்கவே மயங்கி ஏக்கமாய் மெலிந்தேன் அங்கமே.

மங்கை மார்கள் அத ரங்கள் நேர்பவள வல்லியே!
'பிரியேன்' என்று சொல்லியே - போன
வாசக் கடம்பின்வர நேசத்துடன் சொல்லுமோ பல்லியே?

அங்க யத்தில் நிறை பங்க யத்துள் உறை அன்னமே!
பிரியம் வைத்து முன்னமே - கட்டி
அணைத்த வேல்முருகன் தனைக்கண் காணேன் ஐயோ! இன்னமே.

12. தலைவியின் ஊடல்


ஆறுமுக வடிவேலவ னே! கலி-
யாணமும் செய்யவில்லை; - சற்றும்
அச்சம்இல் லாமலே கைச்சர சத்துக்கு
அழைக்கிறாய், என்ன தொல்லை?

மீறிய காமம்இல் லாதபெண் ணோடே
விளம்பாதே வீண்பேச்சு - சும்மா
வெள்ளைத் தனமாகத் துள்ளுகிறாய்; நெஞ்சில்
வெட்கம் எங்கே போச்சு?

மேட்டிமை என்னிடம் காட்டுகிறாய், இனி
வேறில்லையோ சோலி? - இதை
வீட்டில் உள்ளார் கொஞ்சம் கேட்டுவிட்டால், அது
மெத்தமெத்தக் கேலி!

தாட்டிகம் சேர்கழு காசல மாநகர்
தங்கும்முரு கோனே! - இந்த்ர
சாலத்தி னால் என்னைக் காலைப் பிடித்தாலும்
சம்மதியேன் நானே.

'அக்கரைக் காரர்க்குப் புத்திகொஞ் சம்' என்பார்
ஆரும்பழ மொழியே,- நீயும்
அப்படி என்னைப் பலாத்காரம் செய்திடில்
ஆச்சுது பெண் பழியே.

சர்க்கரைக் கட்டிபோல் வள்ளிதெய் வானையாம்
தையல்உனக் கிலையோ? - இரு
தையலரைச் சேரும் மையல் உனக்கென்ன
தானும்ஒரு நிலையோ?

அம்புவி மேல்சிறு பெண்களில் மேல்உனக்கு
ஆசை ஏன் காணுதையா? - நீர்
ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறாதவ-
ராகவேதோணு தையா!

நம்பும்அண் ணாமலை தாசன் பணியும்
நளினமலர்ப் பாதா! - கொஞ்ச
நாளைக்கு மேல் ஒரு வேளைக் குலீலை
நடத்தினால் ஆகாதா?

13. பாங்கி தலைவி நிலைமை கூறி தலைவனை அழைத்தல்


கண்ணா யிரம்படைத்த விண்ணூ ரிடம்தரித்த
கனவயி ரப்படை யவன்மக ளைப்புணர் கத்தனே! - திருக்
கழுகு மலைப்பதி அனுதினம் உற்றிடு சுத்தனே!

அண்ணா மலைக்கிடர்கள் நண்ணா தொழித்து மிக
அகமகி ழத்தன தருளை அளித்திடும் ஐயனே!-திசை
அரவமும் வெட்குற மயிலை நடத்திய துய்யனே!

மின்னோ கமலமலர்ப் பொன்னோ எனப் புகல
விகசித ரத்தின நகைகள் தரித்தொளிர் மெய்யினாள்; - கதிர்
விரவிய சித்திர வளையல் அடுக்கிய கையினாள்.

எந்நேர மும்மனதில் உன்மீதில் மையல் கொண்டு
எழுதிய சித்திரம் எனமவு னத்தினில் இருக்கிறாள்;- வள்ளத்து
இடுகிற புத்தமு தினையும் வெறுத்தரு வருக்கிறாள்.

கும்பத் தினைச்சினந்து வம்பைப் பிதிர்த் தெழுந்து
கொடி இடை முற்றிலும் ஒடியவளைத்தது கொங்கையே; - மணம்
குலவு கடப்பினில் நினைவது வைத்தனள் மங்கையே.

செம்பொற் சிலம்புகள் புலம்பப் பெரும்தெருவில்
திகழ்தரு சிற்றில்கள் புரிவதை விட்டவள் தியங்கினாள்; - உன்றன்
திருவழ வைக்கரு விழியுள் இருத்தியே மயங்கினாள்.

போராடு தற்குரிய கூரார் மலர்க்கணைஎய்
பகழ்பெறு சித்தச தனுவத னைப் பொரு ருவத்தாள்;- தவம்
புரிபவ ரைத்தன தடியில் விழப்புரி பருவத்தாள்.

சீராக மெத்தைதனில் நேராக வைத்துனது
திருவத ரக்கனி அமுதை அருத்தியே சேரையா!-இந்தத்
தெரிவை உளத்துனை யலது பிடித்தவர் ஆரையா?

14. தலைவி பாங்கியைத் தூது விடுதல்


பூமிமெச் சிடும்அண் ணாமலைக் கோர்துணை யானவன்
மயில் வானவன், ஒரு கானவன் - எனப்
புனத்தைக் காக்கும் வள்ளி
தனத்தைப் பார்க்க மெல்லப் போனவன்.

சேமமுற் றகழ காசலே சனையே தேடுதே;
மனம் வாடுதே; கால்தள் ளாடுதே; - இரு
செங்கை தங்கி நின்ற
சங்கி னங்கள் கழன் றோடுதே.

தென்ற லானபுலி வந்து கோபமொடு சீறுதே
தடு மாறுதே; இதழ் ஊறுதே; - மெத்தத்
தீமை யாம் இருளில்
காம லா கிரியும் மீறுதே.

குன்ற மானமுலை ரண்டும் மார்பில் விம்மிக் கொண்டுதே;
தேமல் மண்டுதே; வெப்பும் கண்டுதே; - மலர்க்
கொம்பு போல மென்ம-
ருங்கு லான தும்து வண்டுதே.

உள்ளம் மெல்லமெல்ல லீலை செய்ய நினைந் துருகுதே;
முத்தம் கருகுதே; கண்ணீர் பெருகுதே; - என்றன்
உச்சிக் கேறிக் காமப்
பித்தம் கிறுகி றென்று வருகுதே;

வள்ளம் மேவும்பசும் பாலும் தேனும்அரு வருக்குதே;
கசந் திருக்குதே; துன்பம் பெருக்குதே; - வன்ன
வாரும் தாறு மாறாய்க்
கீற வே தனமும் பருக்குதே.

பார மானகொங்கை ஓரம் வேடன் அம்பு பாயுதே;
உடல் தேயுதே; மலர் தீயுதே; - கொடும்
பாவி யான மதி
ஆவி சோர வந்து காயுதே.

மார வேளினாலே கோர மானகாம் வாதையே
எனும் தீதையே தீரத் தூதையே! - சொல்லி
வாட்டம் தீர் குகனைக்
கூட்டி வாடி யடி கோதையே!

15. பாங்கி தலைவியின் அவயவத்தருமை சாற்றல்


சந்தவரை வந்தகுக நாதா! - பரை
அந்தரி மனோன்மணியாம் மாதா - தந்த
சண்முக சடாட்சரவி நோதா!
குழைத் காதா! சூரர் வாதா! - வன
சஞ்சரிவெண் குஞ்சரிச மேதா!

செந்தமிழ்அண் ணாமலையை ஆளாக் - கொண்ட
கந்தஅர விந்த மலர்த் தாளா! - கள்க-
சிந்திடும் கடம்பணியும் தோளா!
நெடு நாளா(ய்) மற வாளா(ய்) - உனைத்
தேடோ ர்குயில் பேடுருவம் கேளா(ய்)!

சுந்தரம் மிகுந்தகுழல் மேகம்; - அவள்
சொந்தநுதல் இந்துவிலோர் பாகம்;- திருந்-
தும்புருவம் வில்லோடுசி நேகம்;
தவ யோகம் வென்ற நேகம் - வஞ்சம்
துஞ்சுவிழி நஞ்சினிலும் வேகம்.

சந்தம்மலி கின்றமுகம் இந்து; - வள்ளைத்
தண்டுசெவி என்பதுவே தந்து; - கன்னம்
சாணை; நுனி நாசியின்ப சுந்து
மதுச் சிந்து தல்பொருந்து - சிறு
சண்பகம்; துப் பாம்இதழ்சி வந்து.

செங்குமுத புட்பமதை ஒத்து, - மொழித்
தேனுதவும் வாய்நகையோ முத்து; - கண்டம்
சீதரனார் ஊதுவர நத்து;
சொல்தி தித்துப் பாகைக் கைத்து - விடச்
செய்யும்என உன்னலாம்உ ளத்து.

குங்குமவா கங்கசகோ தண்டம்; - முன்கை
கோமகர யாழ்உவமை விண்டம்; - கையைக்
கோகனக மோஎனம ருண்டம்;
ஆழி மண்டங் குலி கண்டம் - நெருங்-
கும்கெளிறு சிறுகிளித் துண்டம்.

கட்டுகதிர் பட்டுமணி வம்பு - கிழி
பட்டுவழி விட்டிடஎ ழும்பு - கிற
கட்டழகாம் வட்டமுலை, செம்பு,
யானைக் கொம்பு, சிவ சம்பு - குடங்
கைக்கும்வளை யாதபொற்ப றம்பு.

மட்டுமிழ் பசுந்துளப மாலே - செங்கண்
வளருகிற தவிசெனும்ஓர் ஆலே - சிறு
வயிறு; மயிர் சிற்றெறும்பு போலே;
விரை வாலே வெள்ளம் மேலே - சுற்றி
வந்தசுழி உந்தி; இடை நூலே.

தாமரவ படமென் அல்குல் உண்டு; - தொடை
தங்கநிறச் செங்கதலித் தண்டு; - முழந்
தாட்குவமை கேட்கில் அவை நண்டு;
சினை கொண்டு வளர் பெண்டு - வரால்
தானே கணைக் கால் எனும் இரண்டு.

பரடு, தராசு உயர்குதி, கந் துகமே; - அணி
பரவுபுற வடியிணை, புத் தகமே; - கடற்
பவளமதி தசவிரல்கள் நகமே;
அம்போ ருகமே பத யுகமே; - மயில்
பண்ணும் இளஞ் சாய ஐயா சகமே.
மேனகையோ டுருவசிஇந்த் ராணி - செல்வம்
மிக்கதிரு முக்யகலை வாணி - இந்த
மின்னரசி தன்னுருவம் காணில்
நெஞ்சு நாணி மலர்ப் பாணி-தலை
மீதுகுவித் துத்தொழுவார் பேணி.

சேனையொடு வந்துகருங் காவி-அம்பைச்
செய்யகருப் புச்சிலைவைத் தேவி - சண்டை
செய்யும்ஒரு மன்மதனாம் பாவி
எங்கள் தேவி உடல் ஆவி - தனைத்
தீர்க்குமுனம் காத்திடுவாய் மேவி.

16. தலைவன் வருத்தம் சாற்றல்


வன்னத் தினைமாவைத் தெள்ளியே - உண்ணும்
வாழ்க்கைக் குறக்குல வள்ளியே! - உயிர்
வாங்கப் பிறந்திட்ட கள்ளியே! - இரு
வட மேருவை நிகராகிய புயமீதணி பலமாமணி
மாலை படீர்எனத் துள்ளியே - விழ
வான்மதி வீசும்தீ அள்ளியே.

கன்னத் தினில்குயில் சத்தமே - கேட்கக்
கன்றுது பார்என்றன் சித்தமே; - மயக்
கஞ்செய்பு தேகாமப் பித்தமே; உடல்
கனலேறிய மெழுகாயின தினியாகிலும் அடிபாதகி!
கட்டி அணைத்தொரு முத்தமே - தந்தால்
கைதொழு வேன் உன்னை நித்தமே.

வாடி யிருப்பது வஞ்சமோ? - பொல்லா
வன்கருங் கல்லோஉன் நெஞ்சமோ? - கொண்ட
மையல் பயித்தியம் கொஞ்சமோ? - சிலை
மதனாகம முதுகாவியம் அதிலேமொழி சுகலீலையின்
மார்க்கம் உனக்கென்ன நஞ்சமோ?- ஒரு
வார்த்தை உரைக்கவும் பஞ்சமோ?

தேடக் கிடையாத சொன்னமே! - உயிர்ச்
சித்திர மே! மட அன்னமே! - அரோ
சிக்குது பால்தயிர் அன்னமே - பொரு
சிலை வேள் கணை கொலைவேலென விரிமார்பினில் நடுவேதொளை
செய்வது கண்டிலை இன்னமே,- என்ன
செய்தேனோ நான்பழி முன்னமே?

17. தலைவி பாங்கிக்குக் கூறல்


செந்தில் மாநக ரம்தனில் மேவிய
தேசிக னாம்முரு கேசன்; மயில்
வாசியில் ஏறும்உல் லாசன்; - சிறு
திங்களும்பண சங்கமாசுண-
மும்துலங்கிய கங்கையாறொடு
செஞ்ச டாடவி மீதணி வார்செவி
சேரமுன் ஓதுஉப தேசன்; - அடி
யார்தமை ஆள்விசு வாசன்.

எந்த நேரமும் வந்தனை செய்தடி
எண்ணும் அண் ணாமலை தாசன் - துதி
பண்ணும்மெய்ஞ் ஞானவி லாசன், - என்னோடு
இந்தெழுந்து தயங்குமாலையில்
வந்துவண்டு முழுங்குசோலையில்
இன்ப சாகர மாகிய லீலைகள்
அன்புட னே செய்தான் மானே,- அந்தச்
சம்ப்ரமம் என்ன சொல் வேனே!

மங்கை மார்பல ரும்புடை சூழ்தர
மாமலர் கொய்திடச் சென்றேன்; - அங்கோர்
பூமரத் தேதனி நின்றேன், -சந்த்ர
மண்டலங்களை வென்ற ஆனனம்
ஐந்தொடொன்று மிகுந்துவார்மது
வண்ட லோடு கடம்பெனும் ஆரமும்
வாரமும் தோன்றிடச் சேர்ந்தான்; - எனது
ஏரும்பார்த் தேகளி கூர்ந்தான்.

.பங்க யாசனம் மேலுறை நான்முகப்
பாதக னும்மலர்க் கைதான் - கொண்டுன்
சோதியை எப்படிச் செய்தான்? - அடி
பஞ்சுரஞ்சினும் அஞ்சுசீரடி
கொஞ்சுரஞ்சித வஞ்சியே! புவி
பட்டு நீநிலை நிற்கவொண் ணா தென்று
பன்மலர் மெத்தையொன் றிட்டான்; - பின்பு
மென்மெல வந்தென்கை தொட்டான்.

8. துதி


கன்னல் சூழ்பழ னம்புடை சூழ்கழு-
காசலம்தனில் வாழ்பிர தாபனே! - கன
வாசம்எங்கும் கமழ்கின்ற நீபனே! - வளர்
காதலோடிரு போதிலும்பல
போதினால் பணி வார்மனத்துறை
காரிருட்குவை நீக்கிய தீபனே! - அதி
சூரபத்மனைத் தாக்கிய கோபனே!

சென்னி மாநகர் வாழும் அண் ணாமலை
செப்பும்செந் தமிழ்க்கதி நேசனே! - சிவ
சுப்பிரமண் யனெனும்பிர காசனே! - கொடுஞ்
சிந்தைநைந்து புலம்பிநின்திரு
மந்திரம்தனில் வந்தடைந்துனைச்
சேவிக்கும்குணம் என்றெனக் காகுமோ? - மிகு
பாவிக்கும்துயர் எப்படிப் போகுமோ?

வந்த வர்க்குப் பழம்புளிக் காடியே
தந்திடச்சகி யார்தமைத் தேடியே, - பிர -
பந்தம் எத்தனை எத்தனை கோடியே - குலை
வாழையின்பழ மோகனிந்திடும்
மாழையின்கனி யோஎனும்படி
மதுரிதம்பெ றவேநிதம் பாடியே, - ஒரு
விதப்பரிசும் பெறாதுளம் வாடியே,

வெந்த ரைக்குள் வெடிப்பிடைப் பாலையே
சிந்துபித்தரைப் போல்வெறும் வேலையே - செய்யும்
வீணன்நான்விளங் குன்தண்டைக் காலையே, - எந்த
வேளையும்துதி கூறவும் துயர்
நீளும்வெம்பவம் மாறவும்புரி
வில்வவேணிசேர் கற்பக வாலையே - தரு
செல்வனே எனும் கற்பகச் சோலையே!

19. தலைவியின் ஊடல்


செந்தூர் வளர்முருக நாதா! - அருணோதயச்
செந்தா மரைநிகரும் பாதா! - திகழ்
சிந்தையில்அண் ணாமலைசெய்
நிந்தையை எண் ணாது அருள்செய்
சித்திர வேல்கரவி நோதா!- உனதுவஞ்சச்
செய்கைஇன் னமும்தெரி யாதா?

சந்தோச மாகவே போய் வீடு - வீடுகள் தோறும்
சரசம் கொண் டாடுவதே பாடு; - வந்துன்
தன்னுடனே சேர்பிரியக்
கன்னியர்கள் பேர்வரியச்
சகஸ்திரம் வேணுமேவெள் ளேடு! - தனித்தோரிடம்
தங்கியே மேயுமோவெள் ளாடு?

வேசையர் வாசலிலே சென்று - தம்பலங்களை
வெட்கமில் லாமல்வாங்கி மென்று, - தின்று
மெத்தப்பயித் தியம் கொண்டு,
சுற்றித்திரிந் தேம ருண்டு,
வீடுதேடி வந்தாயே இன்று; - தொடவேமாட்டேன்
வேணும் என் றாலும்போடு கொன்று.

ஆசை கொண் டவருக்கு ரோசம் - கிடையாதென்பார்
அப்படிககாகில்விசு வாசம் - வைக்கும்
அந்தவிலைப் பெண்டுகளைச்
சொந்தமெனக் கொண்டனையே,
ஆனாலும் உனைப்போல மோசம் - போனவர் உண்டோ ?
ஆரும் செய்கி றாரேபரி காசம்!

கந்தா செய்யேதே பல வந்தம் - புதுமலரைக்
கசக்க அறிவார்களோ கந்தம்? - சற்றும்
காதலிலா மல்சினந்த
மாதைவலி யப்பிடித்துக்
கலந்தால் வருமோசுகா னந்தம்? - உனக்கெனக்கும்
கனவிலும் இல்லைஇனித் தொந்தம்.

."
எந்தப் பிறப்பினுமே வல்லி, - உனையல்லாமல்
எவளையும் சேரேன் என்று சொல்லி - ஊரில்
எத்தனை பரத்தையையோ
நித்தமும் அணைத்தனையோ?
இப்படிக் காசிகாஞ்சி டில்லி - கன்யாகுமரி
எங்கம்பார்த் தாலும் இல்லை சல்லி!

கங்கு கரை இல்லையே சாடை - சொல்லிவைபவர்!
கட்டுகி றாயே எதற் காடை? - மானம்
காக்கவல்ல வா? என்பாலே
சேர்க்கையிலா தே அன்பாலே
காத்தாயே வேசைமாதர் மேடை! கைவசமாமோ
கலப்புல்லுத் தின்றாலுமே காடை?

குங்குமம் சந்தனம் சவ் வாது - சுககதம்பம்
குமுகுமென் றேபுயத்தின் மீது - வாசம்
கொட்டுது எழில் நெற்றிசந்தப்
பொட்டொடுப கட்டுதுஇந்தக்
கோலம் புதிதாய்வந்த தேது? - நடந்ததெல்லாம்
கொஞ்சம் சொல் வாய்பண்ணாதே சூது.

20. தலைவி வருந்தல்


பாளை வாய் கமுகில் வந்தூர் வளை பாய் வயல்சூழ்செந்தூர்
பாலனம் புரியவந்த புண்ணியா! போகம்
காலையும் செய் கிறாய் முன்பின் எண்ணியா?

."
வேளை யோ விடிந்ததையா, நாளை வாறேன் இன்றுகையை
விட்டி", டென்றா லும்விடாமல் பிடிக்கிறாய்! - பாலை
ஒட்டவே மடி அரிந்து குடிக்கிறாய்!

நித்தமும்அண் ணாமலை செய் குற்றமெண்ணா வேலா! கண்டோர்
".
நின் இதழ்ப் பவளங்களில் வெள்ளை - தென்றால்
என்ன சொல்வேன் நான் ஒரு பெண் பிள்ளையே?

மத்தக நிகர்தனத்தில் மெத்தநக ரேகைபட்டு
மாலைப்பிறை போல் அனந்தம் தோணுதே!- இது
கேலித்துறை யாகுமென்று நாணுதே!

உன்னையும், விவாகமில்லை என்னையுமே அன்னைகண்டால்
ஒன்றும்சொல்லி டாளோ, அட பாவியே? - ."இன்று
தின்றிடுவேன்" என்பாள் பச்சை நாவியே.

".
சன்னை சாடை யாகவந்தென் தன்னையணைவாய் நீ" என்று
சாற்றிடும் என் உண்மையான சொல்லையே, - விட்டுக்
கூற்றுவன் போல் வந்தாய்என்ன தொல்லையே!

சாறுசேர் கரும்புருசி யாயிருந்தா லும்வேரோடோ
தான்பறித்துத் தின்னுவது ஞாயமோ? - முழு
ஆண்பிள்ளைக்கு இதுதான் சம்ப்ர தாயமோ?

நூறுதரம் மாறிமாறி வேறுவேறு லீலைசெய்தால்
நோகுமோநோ காதோ எனக் குள்ளமே? - கொண்டு
போகுமோகி ணற்றுநீரை வெள்ளமே?

21. நற்றாய் இரங்கல்


என்னடி நான் பெற்ற மங்கை?
இரு கொங்கை-
களில் சங்கை? - எண்ண
எத்தனை கோடியோ செங்கை - விர-
லிடமேவளர் நகரேகைகள்
மிகவேபடு வகைதோகையில்
ஏய்ந்த முருகவேள் கிள்ளி - உனைத்
தோய்ந்ததோ சொல்லடி கள்ளி?

அன்னவயல் செந்தூர் வாசன்,
மந்த காசன்,
அன்பர் நேசன், - நாளும்
அண்ணா மலைக்கவி ராசன் - பாடும்
அமுதச்சுவை தருமுத்தமிழ்
களபத்தொடுகமழ் பொற்புய
அற்புத வேலன் செய் சாலம் - தன்னால்
கற்பழிந் தாயோ இக் காலம்?

சித்தசன் கொக்கோக நூலை
அந்தி மாலை-
யொடு காலை - வைத்துச்
சிந்திப்ப தாச்சுதுன் வேலை! - சிமிழ்ச்
சின்னத்தன மடவஞ்சியே!
உன்னைப்பணி வொடு கெஞ்சியே
சேவற் கொடியோன் பூஞ் சோலை - தனில்
தேடிப் புரிந்தானோ லீலை?

மெத்தப் பிரமை கொண் டேங்கி,
கொங்கை வீங்கி,
நேசப் பாங்கி - மாரை
விட்டுத் தனியாக நீங்கி, - வடி
வேலுக்கதி பதி மையலே
மேலிட்டல றியதையலே!
வெட்கத்தைப் போகடித் தாயோ?-காம
வேசைத் தனம்படித் தாயோ?

இன்னம் விவாகமே இல்லை,
கமழ் கொல்லை
வெடி முல்லை - குழல்
எங்கும் சிங்கரித்து வில்லை - சந்தம்
இனிதாகிய களபம்தன
கனமேருவில் அணிகின்றனை,
இப்படியும் தலை விதியோ? - பெண்ணே!
செப்படியே இது மதியோ?

சன்னத மாய்க்காமப் பேயே
பிடித் தாயே!
வேப்பங் காயே - போலச்
சாதம் வெறுத்தாயே நீயே! - பெருஞ்
சண்டாளியே! கண்டோ ர்திரள்
கொண்டேபழி விண்டார்நம
சாதிக்கெல்லாம் ஒரு வடுவே, - வரத்
தான்பிறந்தாய் வந்து நடுவே.

வண்ணப் பயிரவி தோடி
ராகம் பாடி
உற வாடி
மஞ்சத்தி லேசென்று கூடி, - உன்றன்
வன்னப்படி கம்போல் ஒளிர்
கன்னத்தினிலும் தேனிதழ்
வாயிலும் கொஞ்சம்பற் குறியோ - வைத்தான்!
வாலை மகனுக்கும் வெறியோ?

எண்ணங் குமரவேள் பாலே
சென்ற தாலே
இனி மேலே-வயி
றெப்படி யாகிலும் சூலே - வரும்
என்றே என துளம் அஞ்சுது
நன்றே சொலில் என்வஞ்சகம்
இல்லை; கிழவன் சொல் வீணைக் - காரர்க்
கேற்காதென் றாலும்கண் ணாணை.

22. காலம் நீடத் தலைவி வருத்தல்


மஞ்சுநிகர் குந்தள மின்னே!
சத தளங்கள்
விக சிதம்செய்
வாரிசாத னத்தில்வாழ் பொன்னே! - செய்ய
வன்னமே ஒளிர் சொன்னமே! நடை
அன்னமே! இடை பின்னமே பெற
வந்ததன பார வஞ்சியே!
அதி விருப்பத்-
துட னுரைக்கும்
வார்த்தை யைக்கேள், ஆசை மிஞ்சியே.

அஞ்சுவய தான பருவம்-
தனில் எனது
சிறு மனைமுன்
அங்கசவேள் போல உருவம் - பெற்றே
அன்று வந்து நயந்து மாலையில்
நெஞ்ச ழிந்து மயங்க வேபுணர்
ஆறுமுக வேல வனையே
நினைவு கொண்டே,
மதி மருண்டே,
ஆறுதில்லை, என்ன வினையே!

என்னிரண்டு கண்ணும் தேடுதே
கனவி னிலும்
மனது நினைந்-
தேக்கமுற் றலைந்து வாடுதே - முன்னம்
என்றன் ஆகம தொன்ற வேபுணர்ந்-
தன்று போனகு கன்றன் ஆவலை
எண்ணியெண்ணி என்ன பயனே?
உருகி நிதம்
மறுகி விழ
இப்படி விதித்தான் அயனே.

சென்னிகுளம் மேவிய வாசன்
இனிய துதி
அனுதி னமும்
செய்திடும்அண் ணாமலை தாசன் - பாடும்
சிந்து மீதுமி குந்த மோகமு-
றும்சு சீலகு கன்ச ரோருக
திவ்வியமு கங்கள் ஆறுமே,
கண்களில் கண்டால்
பெண்களுக் கெல்லாம்
செவ்விதழும் வாயம் ஊறுமே.

23. பாலனைப் பழித்தல்


அங்கத்தில் பசப் பாச்சே! - அழகு
அவ்வளவும் குடி போச்சே! - முந்தி
ஆதிபிர மாவகுத்த சோதனையி னால்உதித்த -
தையோ! இதும் பொய்யோ?

தங்கக் கிண்ணங்கள் போலே - மின்னும்
தனங்களும் சாய்ந்த தாலே, - கந்தன்
தன்னை மரு விச்சுகித்த கன்னியர்க்கு ளெல்லாம் மெத்தத்
தாழ்ந்தேன், நொந்து வீழ்ந்தேன்.

சாமம் நாலினும் பிரியான் - என்னைத்
தனிக்கவிட் டெங்கும் திரியான், - கர்ப்பம்
தன்னையறிந் தென்னையும்விட் டன்னியராம் கன்னியரைச்
சார்ந்தான்; ஆசை தீர்ந்தான்.

".
காமம் மீறு" தென் றழுவான், - பின்னும்
காலிலே வந்து விழுவான், - அவன்
காசுதனில் ஆசைமிகும் வேசையர்கள் மீதினிலே
கடந்தான்; அங்கே நடந்தான்.

".
கோடிச் சேலைக்கொரு வெள்ளை, - இளம்
குமரிதனக் கொரு பிள்ளை" - என்று
கூறுகின்ற வார்த்தை நெஞ்சில் தேறி எனக் கானதென்று
கொண்டேன்; மனம் விண்டேன்.

வேடிக்கை யெல்லாம் விடுத்தேன்; - பஞ்சு
மெத்தையும் தள்ளிப் படுத்தேன்; - கோடி
மின்னலொளி போலிருந்த எந்நிறமெல் லாம் மெலிந்து
வெளுத்தேன் பிஞ்சில் பழுத்தேன்.

சென்னி மாநகர் வாசன்; - துதி
செயும் அண் ணாமலை தாசன்; - தர்ம
சிந்தையில் இருந்து நித்தம் வந்ததுய ரம் தவிர்க்கும்
சீலன், உமை பாலன்.

கன்னி மாமதில் சூழும் - திருக்
கழுகமாமலை வாழும் - மயில்
கந்தன், ஒரு மைந்த! நீ பிறந்தபோ துலைந்த தெண்ணிக்
கழித்தான்; மெட்டை அழித்தான்.

அந்தரப் பிழைப் பாச்சே! - நட்-
டாற்றுக் கோரையாப் போச்சே! - இங்கே
ஆறுமுக நாதன்மனை தேடிவரும் வேளை தனி
ஆச்சே, பெரு மூச்சே.

சந்தனம் பன்னீர் வில்லை, - பூசச்
சம்மதம் இப்போ தில்லை; - சிவ
சண்முகக் குமாரவேளுக் கின்னமும்என் மீதில் ஆசை
தருமோ? மோகம் வருமோ?

அழுதா லும் துயர் போமோ? - இந்த
ஆபத் தும்வர லாமோ? - தோழன்
ஆறுமுக னைப் பிரிந்து போகமே நினைந்துருகு-
தாவி, அடா பாவி!

பழுதில் லாதகொக் கோகம் - தனில்
பகரும் காமசை யோகம்; - அந்த
பச்சமுற்ற வேலவனை இச்சணத்தி லே பிரித்தாய்
பாலா! எம காலா!

24. தலைவனிடம் வந்து செவிலித்தாய் கூறுவது


கந்தம்சேர் தருபொழில் திகழ்கழு-
காசல மாநகர் வாழ்முருகா!
கஞ்சம்தான் என ஒளிர் விகசித
கரதல மாதவன் மால்மருகா!
கருதும் அண்ணாமலை தேசிகனே!
அருணை உண்ணாமுலை யாள் மகனே!
கங்குல்பொருந் தும்குழல்தங்-
கும்சிறுபெண் ணும்தினமும்
கண்டு மயங்கினள் அணைவாயே!

தொந்தம்தோம் தொதிங்கண வென்று
துலங்கும் அரம்பையர் ஆடிடவே,
துன்றும்தே மழை என வீணைகள்
தும்புரு நாரதர் பாடிடவே,
சுடர்மர கதம்நிகர் தோகையிலே
திடமொடு பவனி நீ போகையிலே,
தொங்கல்களும் சங்கினமும்
பொன்கலையும் சிந்தினள்உன்
சொந்தம் எனும் கனி அணைவாயே.

அண்டம்பா தலமதி லும்கிடை-
யாத சவுந்தர ரூபவதி;
அஞ்சம்பால் அனுதினம் அமர்புரி
அங்கச ராசன் அடைந்தநிதி;
அகிலமும் அருள்பிர காசமயில்;
மிகமது ரிதமொழி பேசுகுயில்;
அன்றிலும் இந் தும்கடலும்
கண்டுமருண் டஞ்சுதல் கொண்-
டங்க மெலிந்தனள் அதுபாராய்!

ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டிலிருந்து எடுக்கப்பட்டவ

அண்ணாமலை ரெட்டியார் தமக்கு நோய் வந்ததைப் பற்றிப் பாடிய பாடல்கள்

சங்கரநயினார் கோயிலில்...


ஓரராசை யங்களிரண்
டெடுத்தனநட் டனத்தரம்பை
யோர்விண் ணாட்ட

மரராசைக் கமலமின்னார்
தம்புருடர் கிம்புருடர்
வரஞ்சேர் தாப

தரராசை வசித்தாந்தப்
பழம்பொருளே யெனுந்துதியு
ததிவாய் போர்ப்ப

வரராசை யெனப் பெயர் பூன்
டெழுபுவிக்குஞ் செழும்புகழ்க்க
வசஞ்செ யூரில் 302

கோமதியம்மன் தவம் செய்யும் தபசுத் திருவிழாவில்


மாமதியா னனமைந்து
படைத்தமண வாளன்முன
மனத்தூ டின்பக்

காமதியா னனமீதற்
றியோகியற்றி னானெனும்ப
கையுட் கொண்டு

கோமதியா னனங்கை தனித்
திருந்துதவம் புரிந்தந்தக்
கொண்கன் தன்னைத்

தாமதியா னனையமொடு
தனைத்தேடி வரப்புரிவித்
தகவி ழாவில். 303

ஊற்றுமலை ஜமீன்தார் நடத்திய விழாவில்


பன்மலரைப் புறங்கண்டாய்
தனுவெடுத்துத் தனுக்கரும்பைப்
பற்று றாம

லன்மலரைம் பாலருக்கு
வருமதனா நீபுரிசா
றதனிற் புன்னை

நின்மலரைத் தொழுவார்க்
கமரர்பதந் தருபவன்போ
னிலத்துப் பூவாப்

பொன்மலரை யின்னரம்பைக்
களியடுவிண் வழியளிக்கும்
போது தன்னில். 304

ஜமீன்தாரைக் கண்டு கவிபாடி, சென்னி குளத்துக்குப் போன பின்


நிற்கண்டு களிகூர்ந்து
துறைசை யிற்சுப் பிரமணிய
நிமலன் மேற்செய்

கற்கண்டு கசக்குமது
ரிதக்கவிசொற் றுனது சிரக்
கம்பத் தானெஞ்

சிற்கண்டு பேரின்பத்
தொடுவிடைபெற் றணிவிடங்கத்
திரள்கள் சூன்மங்

குற்கண்டு வண்டசையு
மணிமாடச் சென்னிநகர்க்
குப்போம் பின்னர் 305

அரையாப்பினால் பட்ட கஷ்டம்


ஆதியிலக் கணப்படியே
யுதித்திரண்டிற் கடங்காத்துன்
பாக்கி மூன்றை

மேனியிற் பலவிதமாச்
செலவுசெயு மாறுபுரி
வித்த நாலிற்

பாதியினா லியான் பட்ட
பாடு சொல முடியாது
பஞ்ச மென்ப

தேதுமில்லை யோதுமில்லை
யுகந்துதெரு வுலவுதற்கு
மேது வில்லை. 306

"நோய் தீர்ந்ததும் வீரகேரளம் புதூருக்கு வருவேன்"


பற்பலபண் டிதர்புரிந்த
வைத்தியததாற் பத்தியத்தாற்
படிவஞ் சாலத்

துற்பலமுற் றெய்த்ததிது
தீர்ந்துககம் பிறந்தபின்புன்
சுமுகங் காண

நற்பலவின் முட்கனியி
னுட்கனியி னறாவருவி
நளிர்கா லோடி

யுற்பலமென் மலர்த் தடங்க
ணிறைத்திடுதென் வீரைநகர்க்
குறுவன் மாதோ. 307

"சீதையிடம் அனுமன் கொடுத்த ராமனின் கணையாழியைவிட ஜமீன்தாரின் கடிதம் சிறந்தது"


தருவா ழிமயவர்பிரான்
றனையனைய சுகபோக
சம்ப னானான்

வெருவாழி கடந்தேற
நீயருளோர் சுபநிருபம்
விரித்தேர்க் கொற்றைக்

குருவாழி ரவிகுலரா
கவதூத னசோகவனக்
கொடிக்கன் றீந்த

திருவாழி எனினுமது
சிறப்பிலதேல் வேறுவமை
செப்பற் பாற்றே. 308

"பகவான் உனக்குக் கிருபை செய்வான்" என்று ஜமீன்தார் எழுதிய கடிதம் கண்டதும் அயர்ச்சி பறந்தது


நன்னிருப குலதிலக
நராதிபசற் குணதரவென்
னாளு மன்பின்

முன்னிருப கவானுனக்குக்
கிருபைசெய்வா னெனும்வாழ்த்து
மொழிக ணாடடி

யன்னிருபத் துனதுபங்க
யக்கரந்தீட் டக்கரங்கண்
டயர்ச்சி யெல்லாம்

பன்னிருப கலுமுளைக்கப்
பரந்தவிருள் பரந்ததுபோற்
பரந்த தாலோ. 318

மேற்படியாரின் கடிதம் கண்டு வெய்ய் வியாதி எங்கோ போய்விட்டது


புவியாதி பதியேதென்
பொதிகைவரைத் தமிழ்முழுதும்
புகுந்து நின்ற

செவியாதி காந்தமெலாஞ்
செறிந்தபுக ழாகரநின்
செங்கை யால் யான்

றவியாதி துசமயத்தி
லருணிருபத் திலகுறுமஞ்
சனங்கண் டென்வெய்

யவியாதி வெவ்விடம
திவ்விடம்விட் டெவ்விடமோ
வடைந்த மனனோ. 319

மேற்படியாரின் கடிதம் கண்டு பிணி தகர்ந்து இன்பம் பெற்றது


மன்னாகப் படிப்பகடு
மதன்சிலையோ டடிமுடியே
வாய்வாய் மேய்ந்து

புன்னாகப் பொதும்பர்நறு
நிழறொறுங்கண் வளர்வழுதிப்
புகழ்நா டாளு

நின்னாகப் பேரளியா
லெற்கருட னிருபம் வந்து
நிலவ லாலே

யென்னாகப் பிணிமுழுதுந்
தகர்ந்தறப்பெற் றனன்பரம
வின்பந் தானே. 320

பிணி ஆறு மாதம்; சுரம் இரண்டு மாதம்


என்பணிய கலக் கடவு
னிடத்தினின்முத் தமிழுமுண
ரியற்கும் பன்கம்

பன்பணியத் தருஙகேள்வி
படைத்தவித யாலயபூ
பாலா மாலாய்

முன்பணிய வினையாலோர்
பிணியாறு திங்களிற்போய்
முடிந்த தப்பால்

வன்பணிய சுரமிரண்டு
மாதமிருந் துறுத்தியால்
வருந்தினேனால். 323

கடவுள் கருணை புரிந்தால், வீரகேரளம்புதூர் நவநீத கிரஷ்ணப் பெருமாள் கோவில் திருவிழாவுக்குவரத் தடையில்லை


முருக்கவிழா நின்ற மலர்
கருக்குமித ழரம்பையரின்
முன்றிற் பாலித்

தருக்கவிழா மதுப்பிலிற்றும்
வீரைநகர்க் கராமகுட
சயன மாறன்

பெருக்கவிழாச் சிறப்பினையு
நீகவிக்குப் புரிசிரக்கம்
பிதமும் யான்பார்த்

திருக்கவிழாத் திருக்கருணை
புரிகுவனேற் றடையறவந்
தெய்து வேனே. 325

"சாப்பிட்டது சீரணிக்க மருந்து அனுப்புக"


தாரணிக்க மருந்துமருந்
தெனக்கயவர்ப் பாடாதென்
தனைக்காத் தாய்பாங்

காரணிக்க மருந்துங்க
வரமளித்தா னட்பினுட
னாக மும்பெற்

றேரணிக்க மருந்துறந்த
புதுமதவே ளேநுகர்ந்த
தெல்லா நன்றாய்ச்

சீரணிக்க மருந்து சிறி
துளதெனில் தனுப்புவண்ணஞ்
செய்விப் பாயே. 326

"எனது இல்செலவுக்காகவே நூறு ரூபாயும் எனக்கு அளிப்பாய்"


மீனூறு வசக்கிடையா
மெல்லியலார் பகலிரா
வேழ மாரன்

றானூறு படாதெழுந்து
வந்தனனென் றுரைத்திடுஞ்சுந்
தரரூ பாசெந்

தேனூறு வசனவித
யாலயபூ பதியெனதிற்
செலவுக் காக

வேனூறு ரூபாயு
மெனக்களிப்பாய் மனக்களிப்பாய்
விரும்பித் தானே. 289

"என் அகத்துக்குப் பணம் தந்திடுக"


பொன்னகத்துக் குப்பணவன்
வன்கையிலைக் கும்பணைத்த
புயவி சால

மன்னகத்துக் குப்பணவு
மணிபலவிண் மணியெனவில்
வழக்குந் தெய்வப்
பன்னகத்துக் குப்பணப்பா
ரம்பொறுத்த மருதப்ப
பாண்டிய கோவே

யென்னகத்துக் குப்பணந்தந்
திடக்கருணை முழுதினும்வைத்
திரட்சிப் பாயே. 295

"கம்பனுக்கு ஒப்பானே"


பிரமரசங் கக்கந்தக்
கவினளினத் தாரையணி
பிரமன் மாதே

வரமரசங் கக்கந்தக்
கவினளினத் தாரையடு
மழுவா னஞ்சக்

கிரமரசங் கக்கந்தக்
கவினளினத் தாரையுய்த் தோன்
கிளர்தோள் வாழ்த்தும்

பரமரசங் கக்கந்தக்
கவினளினத் தாரைபெய்கம்
பனுக்கொப் பானே. 291

கல்விப் பழக்கந்தனில் கம்பன் சிரக்கம்பம் ...


முப்பழக்க மதுரமுற
ழியலிசைநாடக மென்ன
மொழியுஞ் செங்கல்

விப்பழக்கந் தனிற் கம்பன்
சிரக்கம்பஞ் செயவுணர்ந்த
மேலோ னேதே

யுப்பழக்கஞ் சுழலவரு
காளியொடு கூளிகளு
முவப்ப வென்னார்

குப்பழக்கந் துணித்து நெய்யுட்
ளித்துறையிற் குடிபுகும் வாட்
குடங்கை யானே. 300

"காயாவா காயமதி" என்ற எதுகை


காயாவா காயமதிக்
கொன்னலரை யேற்றுவில்லா
கவபு விச்ச

காயாவா காயமதிற்
கிளுவையித யாலயதுங்
காவே ளம்பு

காயாவா காயமதி
கம்படவென் றோதநல்லார்
கரும்பு வேப்பங்

காயாவா காயமதி
கதிராவென் றுருகுவளென்
கன்னி தானே. 7

சரிகமபதநி


சரிகமப தநியேற்குச்
சந்துசொலென் பாண்மதனே
தைக்க மார்பிற்

சரிகமப தநிசமனத்
தார்க்கருள்சங் கரவெனுமத்
தத்தி நில்லா

சரிகமப தநிதநித
மனையரருத் திடினுமருந்
தாமல் வாடிச்

சரிகமப தநியெனப்பா
டுதலைமறந் தாளிதயா
லயசற் கோவே. 42

சாயாதரங்கிணி


தினஞ்சாயா தரங்கிணியி
னும்மிவள்கட் புலனதுபோற்
றெருவிற் சிற்றின்

மினஞ்சாயா தரங்கிணித்த
னைவிதியைத் தொழுதழற்கண்
விழிக்க நான்செய்

யினஞ்சாயா தரங்கிணுசூ
தனநகில ரதிகணவா
வென்னுந் தோய்மோ

கனஞ்சாயா தரங்கிணிதே
ரெங்களித யாலயசிங்
கார மாலே. 66

நடனாராயணி


நடனாரா யணியணிவண்
டினம்பகர்கா வடுத்தெடுத்த
னங்க னாங்க

படனாரா யணியணிகொங்
கையிலெயவம் பின்றுகண்ணாற்
பார்த்தா லென்னோ

வடனாரா யணியணிவாழ்
நடராயா வென்பளென்ற
னவதி யெல்லா

மடனாரா யணியணியா
வோதிருத யாலயன்பான்
மருவித் தானே. 67

சாவேரி


சாவேரி யம்பையிர
வியனமிசை யாள்விழிவந்
தசல நேருங்

காவேரி யம்பையிர
வியனமதி யன்றிறென்றற்
காற்று மாமா

தாவேரி யம்பையிர
வியனரலை பகைமொழிக்குத்
தருந்தீ தாருப்

பூவேரி யம்பையிர
வியனமிசை யாளிதயா
லயபூ மானே, 68

காம்போதி


எப்போதுங் காம்போதி
வண்டிசைக்குங் குழன்முடியா
ளெழிலார் வேலோ

வப்போதுங் காம்போதி
யோவெனுங்கண்டனையிமையா
ளங்க சன்புங்

கப்போதுங் காம்போதி
சையும்பகையாம் பட்டதுசங்
கடனங் கன்னிக்

குப்போதுங் காம்போதி
சரியவணைத் தாளிதயா
லயகோ மானே. 69

மோகனம்


மோகனஞ்சு மாதவிக்குப்
போரியற்ற மூரியற்றுன்
முன்பு வேதா

வாகனஞ்சு மாதவிக்கும்
படிநிதமுந் தூதுவிடு
வாள்கை யிற்சங்

கேகனஞ்சு மாதவிக்கும்
படர்துடவைப் பூப்பறியா
ளிடைய ருங்கோ

மாகனஞ்சு மாதவிக்கும்
பாலருந்தா ளணையிதயா
லயவல் லோனே. 70

சேற்றூர் முதலிய ஊர்ப் பெயர்கள்


சேற்றூருங் கமடமதொப் பாம்புறவங் கிரிசந்
திரகிரியே யிளமுலைவஞ் சிவகிரி நூன் மருங்கு
போற்றுமெழி லூர்க்காடு பிடித் தடக்கை நிகராம்
புணராச்சங் கடம்பூர்வப் புலனைமயக் குதென்றாள்
வேற்றுமுகம் பாராப்பெண் மணியாச்சி வருமே
விறற்சிங்கம் பட்டினிமே வினும்புல்விரும் புறுமோ
வூற்றுவரை முன்படைத்த வூற்றுவரை மகிபா
வுயர்மருதப் பேந்திரனா முலகதுரந் தரனே. 268

"பரணி" முதலிய நஷத்திரப் பெயர்கள்


பாரார்முன் னெழிற்கிரதி யென்பரிநா ளிவளென்
பரணியணி யாளனங்கார்த் திகைக்குமருத்தினில் வேள்
வோராவா ரோகணிக்கப் பயந்தனள்சந் தந்தி
மிருகசீ ரிடப்புறத்து விழிதுடிக்கு ததனாற்
றீராதி ரையுங்கட லோட் டங்குவர் வெம் பழிச்சொற்
செப்புனர்பூ சம்பூசம் பூவெனிற்சீ றாதென்
றாராலும் பணியுமின்பாற் சொன்மருதப் பேந்த்ரா
வாயிலிய மகமெவையு மறிதரவல் லோனே. 269

இனிப் பாகும் இனிப்பாகும்


பெருங்குவளைத் திருக்குறுவல்
வாய்ப்பெயுமா விடம்பிரியாப்
பிரியன் கொங்கை

நெருங்குவளைத் திருக்குழையார்
மதனனித யாலயனிந்
நேரம் வந்தான்

மருங்குவளைத் திருக்குமெழி
லம்பரஞ்சோ ராதுமுத்த
மாலை போனீர்

இருங்குவளைத் திருக்குகுகா
தினிப்பாகு மினிப்பாகு
மெனக்குத் தானே. 95

மேகலையுமே கலையுமே


பொற்பவனி யாளுகின்ற பூமனித யாலயவே
ணற்பவனி வந்ததொடிந் நாள் வரையுங்-கற்பரிவைக்
கேகலையு மேகலையுற் றெண்ணிறரஞ் சோருமிடை
மேகலையு மேகலையு மே. 206

"இந்த லச்சைக்கு என் சொல்வேனே"


சுரம்பாலுந் தொடையலணி
யிருதயா லயன்பவனித்
தோற்றங் கண்டு

பெரும்பாலு மயலாகிப்
பிறர்முகங்கண் டறியாவென்
பேதை காமன்

கரும்பாலு மரும்பாலுங்
கலையாலு மலையாலுங்
கலங்கி யேத

யிரும்பாலும் பாயசமுங்
கசக்குமென்றா ளிந்தலச்சைக்
கென்சொல்வேனே. 33

ஒருவடை அப்பம்


தருவடையப் பஞ்சுகந்த
மலர்தருவார்க் கருடரும்பித்
தாவெ னப்ப

கருவடையப் பஞ்சுகந்த
வேண்மகிழ்மைத் துனன்விடுக்குங்
காலை மாலை

பெருவடையப் பஞ்சுகந்த
பாதமட வார்பழிக்க
மின்னா ளுண்ணா

ளொருவடையப் பஞ்சுகந்தத்
தணையிருத யாலயனா
முசித மாலே. 82

ரவை ரவையாக அவன்கணை மின்மெய்யைக் கொய்ய


சத்தமலைத் திருப்பரவை
மிகவெழுப்பக் கட்டிலுப
தான மெத்தை

மொத்தமலைத் திருப்பரவை
விழியருவி நீரெழுந்து
முடுக்க மாரன்

மெத்தமலைத் திருப்பரவை
ரவையாக வவன்கணைமின்
மெய்யைக் கொய்யச்

சித்தமலைத் திருப்பரவை
யாரிருத யாலயவ
சீர மாலே. 93

சடைத்தார் ஆள் ஆயிரம்பேர்


கொடைத்தாரா ளாவிருத
யாலயபூ பதியேவிண்
குலவும் வேரி

யுடைத்தாரா ளாநின்ற
நின்புயத்தி லாசைவைத்த
வொருத்திக் கன்னம்

படைத்தாரா ளாவென்று
தன்னருமைத் தாயர்கண்ணாற்
பார்த்துப் பூத்துச்

சடைத்தாரா ளாயிரம்பேர்
சந்தனசே றப்பியப்பித்
தவித்திட் டாரே. 106

வம்புத்தனம் ஆதலினால்


கந்தவம்புத்தன நேர்தேமலார்ந்து கடமெனக்கு
விந்தவம்புத்தன மீதெய்துமாரன் விழைத்தனன்மி
குந்தவம்புத்தன மாதலினாலிக் கொடியுணக்க
சந்தவம்புத்தன மாமிதயாலய தாட்டிகனே. 147

கால்தோசையும் அருந்தாள்


வேளிரதக் காற்றோசை மென்செவியுட் கேட்டரிக்கண்
ணாளிரதக் காற்றோசை யும்மருந்தாள் - காளகண்டங்
கூவநைந்தாள் வாய்கசந்தாள் கூடியித யாலயமால்
பூவனைந்தாள் வாய்தனஞ்செப்பு. 185

காவடிச் சிந்து முதல் பதிப்பு அச்சிடுவதற்கு ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்பத் தேவர்பொருளுதவி செய்தபோது அவர்பேரில் ரெட்டியார் பாடிய பாடல்கள்

ஊற்றுமலையில் வாழும் ராஜராஜன்


படங்கிடங்கர்ச் சனைபுரியும்
பயோதரங்கண் வளர்மாடப்
பந்தி யும்போர்

தொடங்கிடங்கர் தெலுங்கர்வங்கர்
துளுவர்கரு நாடருயிர்
துடிப்புற் றோட

வுடங்கிடங்கர்க் குலம்பிறழ்பற்
பேழ்வாயங் காப்பினுட
னுலாவு கின்ற

தடங்கிடங்கர் களுந்திகழு
மூற்றுமலை மேவியவா
சராச ராசன் 329

வீரகேரளம்புதூர் ஸ்ரீநவநீத கிருஷ்ணப் பெருமாளுக்கு நேசன்


தடங்கான கத்தனத்தி
னொடுநடந்தோன் பழவடியர்
தமக்குத் தாய்க்கெண்

மடங்கான கத்தனத்தி
னகரனைப்போ ரிடைமறைத்தோன்
மகர மூருங்

கிடங்கான கத்தனத்தி
நிகர்சுருபன் கோவியராங்
கிளரும் வம்புக்

கடங்கான கத்தனத்தி
யரைப்புணர்வீ ரைக்கடவுட்
கதிக நேசன். 330

இருதயாலயப் பெயர்கொண்ட அற்புத சுசீலன்


பெட்பரத னத்துடன் பொன்
மலையிரண்டு பிறந்ததெனப்
பெருத்துக் கச்சுக்

குட்பரத னத்துணைகள்
புதைக்கவடங் காதுகிழித்
துருவ வன்பாந்

தட்பரத னத்துறழ்கந்
தரமடவா ரமிழ்துகைத்துத்
தனது செவ்வாய்ப்

புட்பரத னத்துறைச்செ
யிருதயா லயப்பேரற்
புதசு சீலன் 331

முத்துசாமி மன்னனின் நேயனான நெல்லையப்பக் கவிராஜ சிங்கம் அச்சகத்தில்


முல்லையப்பன் மானுமட
மானினியர்க் கொருமதனன்
முரணுந் தெவ்வை

வல்லையப்ப ரும்படை கொண்
டடருமுத்து சாமிமன்னன்
மகிழ்நே யன்பொற்

சில்லையப்ப ளகிபுகளத்
தனக்காந்தி மதிகொழுநன்
திருத்தாள் போற்று

நெல்லையப்பக் கவிராஜ
சிங்கநிறு வியவச்சு
நிகேத னத்தில் 332

கழுகுமலை முருகன் பேரில் பாடிய காவடிச் சிந்தை அச்சிடச் செய்து புகழைக் கைக் கொண்டான்


நாவடிச்சிந் தனந்தரலில்
விலைபகர்ந்தோன் மாவலிபார்
நல்கென் றண்டந்

தாவடிச்சிந் தனந்தமகன்
மருகனென்ற ழைத்திடுகந்
தன்றே மாரி

பூவடிச்சிந் தனந்தவனம்
பொலிகழுகா சலபதிமேற்
பொருந்த நாஞ்சொல்

காவடிச் சிந்தனந்தமச்சிற்
பதிப்பிவித்துப் புகழ்முழுதுங்
கைக்கொண் டானே. 333

சூத்ராள் சொன்ன ராமாயணம்

ஜமீன்தார்கள் தமிழகத்தின் சிறுசிறு நிலப்பகுதிகளை ஆண்டு வந்த கால கட்டத்தில் அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்த பல சம்பவங்களை அப்பகுதி கதை சொல்லிகள் இன்றும் மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஊத்துமலை சமஸ்தானத்தை ஆண்ட ஜமீன்தார்களுள் இருதாலய மருதப்ப பாண்டியன் மிகுந்த தமிழ் பற்றும் திராவிட இனப்பற்றும் உடையவராகத் திகழ்ந்தார். அவரின் அரண்மனையில் தமிழ்ப் புலவர்கள் போற்றிப் பாதுகாக்கப்பட்டார்கள். வீரகேரளம் புதூரை தலைமையிடமாகக் கொண்டே ஊத்துமலை மலை ஜமீனை இருதாலயமருதப்ப பாண்டியன் ஆண்டார்.

அரண்மனைக்குச் சற்று தொலைவில் நவநீதகிருஷ்ணன் திருக்கோயில் கட்டப்பட்டிருந்தது. கோயிலைச் சுற்றிலும் அக்ரஹாரம் அமைந்திருந்தது. அக்ரஹாரத்தில் வாழ்ந்த பிராமணர்கள் கோயில் காரியங்களைப் பார்ப்பது அரண்மனைக் காரியங்களைப் பார்ப்பது என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மருதப்ப பாண்டியர், சிறந்த ரசிகராகத் திகழ்ந்தார். தமிழ்ப்புலவர்கள் பலரையும் ஆதரித்தார். இசைக்கலைஞர்களையும் ஆதரித்தார். மருதப்பரின் அரண்மனையில் அடிக்கடி நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நாட்டியக் கலைஞர்களுக்கு பரிசுகளையும் கொடுத்து மருதப்பர் மகிழ்ந்தார். இரவில் கிட்டத்தட்ட தினசரி பொதுமக்களின் பொழுது போக்கிற்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அவைகளை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மருதப்பரும், மக்களோடு சேர்ந்து ரசித்து மகிழ்ந்தார்.

கவிதை அரங்கேற்றம், மற்போர் அரங்கம், நாடகம், ஒயிலாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் போன்ற நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள், சொற்போர், பரத நாட்டியம் என்று அரண்மனைக்கு அருகில் உள்ள அரங்கில் தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடைபெற்ற வண்ணமிருந்தது. இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த என்றே நிரந்தரமாக அரண்மனைக்கு அருகிலேயே மருதப்பர் ஒரு கலை அரங்கையும் கட்டி இருந்தார். ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சி முடிந்த பிறகு, “நாளை என்ன நிகழ்ச்சி நடக்கும்” என்று அறிவிப்பார்கள். கலை நிகழ்ச்சிகளைக் காண பொதுமக்களுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.

கலை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்கள் தங்குவதற்கு என்று ஒரு இல்லமும், அங்கு தங்குபவர்களுக்குச் சாப்பாடு தயாரித்துக் கொடுக்க என்று சில சமையல்காரர்களையும் மன்னரே ஏற்பாடு செய்திருந்தார். கலை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்களுக்கு அவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப மன்னரே பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார். எனவே, மருதப்பரின் அவையை நாடி, கலைஞர்கள் பலரும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்த வண்ணம் இருந்தனர். கலை நிகழ்ச்சிகளைக் காண அக்ரஹாரத்துப் பிராமணர்கள் தவறாமல் வந்து ஆஜராகிவிடுவார்கள்.

கலை நிகழ்ச்சிக்கான அரங்கை அழகு படுத்துவது, நடக்க இருக்கும் கலை நிகழ்ச்சிக்கு ஏற்ப கலாபூர்வமான வேலைகளைச் செய்யும் பொறுப்பை அக்ரஹாரத்தைச் சேர்ந்த் சிலரிடம் மன்னர் ஒப்படைத்திருந்தார். எனவே, அக்ரஹாரத்துக்காரர்களின் ஆதிக்கம். அங்கு சுற்று தூக்கலாகவே இருந்தது. பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த கலைஞர்கள் தங்கள் திறமையைக் காட்ட அதிக வாய்ப்புக் கிடைத்தது. மன்னரும், கலை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்களைத் தேர்ந்தெடுப்பது, அவர்களுக்குத் தேதி கொடுப்பது போன்ற பொறுப்புகளை அக்ரஹாரத்தைச் சேர்ந்த ஒரு பெரியவரிடம் ஒப்படைத்திருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் தமிழகம் எங்கும் ஜமீன்களைச் சுற்றி இருந்த கலை-இலக்கியச் சூழலே, ஊத்துமலை ஜமீனிலும் இருந்திருக்கிறது. அக்காலத்தில் சொக்கம்பட்டி என்ற ஊரில் ராமசாமி புலவர் என்று ஒருவர் இருந்தார். அவர் தமிழ்ப்புலமை மிக்கவர். ஆரம்பத்தில் குருவிடமும், அதன்பின் அண்ணாவி மார்களிடமும் தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். பிறகு தானே முயன்று இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களை எல்லாம் கற்றுக் கொண்டார்.

தான் கற்ற கல்வி வீணாகப் போகக் கூடாதே என்பதால் கிராமம் கிராமமாகச் சென்று இராமாயணம். மகாபாரதம் போன்ற காவியங்களைக் கதாகாலாட்ஷேபமாகப் பாடி மக்களை மகிழ்வித்து, அவர்கள் தரும் எளிய அன்பளிப்பைப் பெற்றுத் தன் காலஜீவனைக் கழித்துக் கொண்டிருந்தார். இராமசாமிப் புலவர், ‘ஆள் பார்க்க கன்னங்கரேர்’ என்று கரிப்பானைத்தூர் நிறத்தில் இருப்பார். ஓங்கல் தாங்கலான முரட்டு உடம்பு வேறு. மேலும் சட்டையும் போட்டிருக்கமாட்டார். இடுப்பில் மல்லுவேட்டி (தறியில் நெய்த பருத்தி வேட்டி) உடுத்தியிருப்பார்.

சம்சாரி மாதிரி தலையில் ஒரு துண்டை தலைப்பாகையாகக் கட்டி இருப்பார். நெற்றியில் இத்துனூண்டு (சிறிதளவே) திருநீறு மட்டும் தீற்றி (பூசி) இருப்பார். திராவிடப் பாரம்பரியத்தின் அச்சு அசலான அங்க அடையாளங்களோடு இருந்த சொக்கம்பட்டி ராமசாமிப் புலவர் ஊத்துமலை ஜமீன்தாரரான மருதப்பாண்டியரின் தமிழ்ப்பற்றைக் கேள்விப்பட்டு மன்னரைத் தரிசித்து வாய்ப்புக் கேட்க வீரகேரளம்புதூர் அரண்மனைக்கு வந்தார். புலவர் வந்த சமயம், மன்னர் அரண்மனையில் இல்லை. வேட்டைக்குச் சென்றிருந்தார். எனவே புலவர், அரண்மனையில் உள்ள மற்ற ஊழியர்களிடம் தான் வந்ததன் நோக்கத்தைக் கூறினார்.

அரண்மனை ஊழியர்கள், “இந்த மாதிரியான விசயங்களை எல்லாம் அக்ரஹாரத்தில் உள்ள இன்னார்தான் கவனிக்கிறார். எனவே, நீங்கள் அவரைப் பேய்ச் சந்தியுங்கள்” என்றார்கள். புலவரும் அக்ரஹாரத்தில் உள்ள அந்தப் பெரியவரின் வீட்டிற்குச் சென்றார். பெரியவரின் வீட்டு வாசலிலேயே, புலவர் அங்குள்ளவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். பெரியவர் பூஜையில் இருக்கிறார். ‘ரெண்டு நாழிகை’ கழிச்சி வாரும் என்று புலவரிடம் சொன்னார்கள் அந்த வீட்டில் இருந்ததவர்கள்.

புலவரும் பூஜையில் இருக்கும் பெரியவருக்குச் சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நினைத்து அங்கிருந்து சென்று கோயில் மடத்தில் தங்கிவிட்டார். ரெண்டு நாழிகை நேரம் கழித்துச் சென்ற பிறகும் வெகுநேரம் பெரியவரின் வீட்டுத் தாழ்வாரத்தில் புலவர் காத்திருந்த பிறகே, பெரியவரைப் பார்க்க முடிந்தது. புலவர், பெரியவரை வணங்கி, தான் வந்த நோக்கத்தைச் சொன்னார். புலவரின் ஆஜானுபாகமான தோற்றம், கருத்த நிறம், உடை, இவைகள் பெரியவரை முகம் சுளிக்க வைத்தது.

“உம்மைப் பார்த்தால் மலைப்பளினன் (காட்டுவாசி) போல் இருக்கிறது. நீர் எங்கஓய், ராமாயணம், கீமாயணம் எல்லாம் சொல்லப் போகிறீர்? இங்கே, அவையில் இன்னும் ஒரு மாசத்திற்கு நிகழ்ச்சிகள் எல்லாம் ஏற்கெனவே, முடிவாயிற்று. மகாராஜா வேறு ஊரில் இல்லை. எனவே நீர் ஊருக்குப் போயிட்டு இன்னும் நாலைந்து மாதம் கழித்து வாரும் பார்க்கலாம்” என்று சொல்லி விட்டார், பெரியவர். புலவர் ‘இந்தப் பெரியவர், ஆளைப்பார்த்து எடை போடுகிறார். நம் புலமையைப் பற்றி தெரிந்து கெள்ள இவர் முயற்சிக்கவில்லை’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, பெரியவரிடம் மறுமொழி ஏதும் கூறாமல் விடைபெற்றுக் கொண்டு நேரே, கோயில் மடத்திற்குச் சென்றுவிட்டார்.

புலவர், அன்று மாலையில் பக்கத்தில் உள்ள சிற்றூர் ஒன்றிற்குச் சென்று அங்குள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து அவ்வூர்ச் சிறுவர்களுக்குத் தமிழ்ப் பாடல்களை எளிய நடையில் இசையோடு பாடி விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார். புலவரின் இசை இன்பத்தையும், இலக்கியச் சுவையையும் கேட்டு, ஊரில் உள்ள சில, பெரியவர் களும், மரத்தடிக்கு வந்து உட்கார்ந்து, புலவரின் கதாகாலட்சேபத்தைக் கேட்க ஆரம்பித்தார்கள். அப்போது அந்த வழியாக மருதப்ப பாண்டியன் வேட்டையை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் தன் பரிவாரங்களுடன் திரும்பிக் கொண்டிருந்தார்.

சற்று தொலைவில் வரும் போதே புலவரின் இசையும், பாடலும் மருதப்பரின் காதில் விழுந்தது. எனவே அங்கேயே நின்று புலவர் பாடுவதை ரசிக்க ஆரம்பித்தார். மகாராஜா நின்றதும். அவரோடு சேர்ந்து வந்த பரிவாரங்களும் நின்றுவிட்டன. புலவரின் இசைப் பாடல்களை மருதப்பரை மயக்கியது. எனவே மன்னர், குதிரையில் சவாரி செய்தபடி, புலவர் பாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தார். மகாராஜா வருகிறார் என்றதும், அங்கு குழுமி இருந்த மக்கள் எல்லாம் எழுந்து அவருக்கு வணக்கம் சொன்னார்கள். புலவரும், இவர்தான் மருதப்பர் என்பதைப் புரிந்துகொண்டு மகாராஜாவை வணங்கினார்.

மன்னர் குதிரையில் இருந்து கீழே இறங்கி, அந்த இடத்திலேயே புலவரை ஆரத் தழுவி, ‘புலவரே நான் சற்று தொலைவில் இருந்தே உம் சையையும், தமிழ்ப்புலமையையும் கேட்டு ரசித்தேன். இன்றே இப்போதே தாங்கள் என்னுடன் அரண்மனைக்கு வரவேண்டும்” என்றார். ‘மன்னன் சொல்லுக்கு மறு சொல் ஏது?’ என்பது பழமொழி. எனவே, புலவரும் மருதப்பரோடு அரண் மனைக்கு வந்தார். அன்று இரவு அரண்மனையில் மன்னரின் விருந்தி னராகத் தங்கினார். புலவரைப் பாடச் சொல்லிக் கேட்டு தமிழ் இன்பம் சுவைத்தார் மருதப்பர்.

மறுநாள் காலையில் அக்ரஹாரத்தில் இருந்த பெரியவர் மருதப்பரைக் காண வந்தார். மகா ராஜாவோடு தான் நேற்று விரட்டி விட்ட புலவர் சமதையாக (சமமான ஆசனத்தில்) உட்கார்ந் திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். மருதப்பர், அந்த அக்ரஹாரத்துப் பெரியவரைப் பார்த்து, “இன்றைக்கு இரவு முதல் ஒரு வாரத்திற்கு இந்த ராமசாமிப் புலவரின் இராமாயண கதா காலட்சேபத்திற்கு ஏற்பாடு செய்யும்” என்றார். பெரியவர்க்கு தலை சுற்றியது. எப்படி இந்தப் புலவர் இங்கு வந்தார் என்ற விபரம் புரியவில்லை. என்றாலும் மகாராஜாவிடம் தைரியமாக, “ராஜா இராமாயண கதா காலட்சேபத்தை எல்லாம் பிராமணர்கள்தான் செய்ய முடியும். இவர் சூத்திரர். ஆளைப் பார்த்தாலே தெரியவில்லையா? இவர் இராமாயன விளக்கம் சொல்லி நாங்கள் உட்கார்ந்து கேட்கவா..- இது அபச்சாரம்” என்றார்.

மருதப்பருக்கு ‘பெரியவரிடம் பொதுப் புத்தி இல்லை. ஜாதிப் புத்திதான் இருக்கிறது’ என்பது ஒரு நொடியில் புரிந்துவிட்டது. மருதப்பர் கோபத்துடன் அந்த அக்ரஹாரத்துப் பெரியவரைப் பார்த்து, ‘சூத்திராள் ராமாயணம் சொன்னால் உங்களுக்கு ஆகாது. நானும் உங்கள் பார்வையில் சூத்ராள்தான். சூத்ராள் சொல்கிற ராமாயணத்தைக் கேட்க விரும்பாத நீங்கள், சூத்ராளாகிய நான் தரும் சம்பளத்தையும், சன்மானத்தையும் மட்டும் எப்படி கை நீட்டி வாங்கிக்கொள்கிறீர்கள்?

கலைகளை ரசிக்க வேண்டுமே தவிர, அது இன்ன ஜாதிக்காரனின் கலை என்று பார்க்கக் கூடாது. ஆளைப் பார்த்து, தோற்றத்தைப் பார்த்து, அவன் பிறந்த ‘குடி’யைப் பார்த்து அவனின் கலையை எடை போடக்கூடாது. இப்போது நான் உத்தரவு போடுகிறேன். “இவர் ஒருவாரம் சொல்லப்போகும் ராமாயணத்தை நீர் உட்பட இவ்வூர் அக்ரஹாரத்தில் உள்ள அனைவரும் கேட்க வேண்டும்” என்றார். மகாராஜாவின் கோபத்தைப் புரிந்துகொண்ட பெரியவர், மகாராஜா உத்தரவுப்படியே ஆகட்டும், ‘புத்தி, புத்தி’ என்று தன் தலையில் தானே கொட்டிக் கொண்டு, புலவரைப் பார்த்ததும ஒரு பெரிய கும்பிடைப் போட்டு விட்டுச் சென்றார்கள்.

அன்று மகாராஜா உத்தரவுப்படி சூத்ராளான ராமசாமிப்புலவர், இராமாணன கதா காலட்சேபதைத் தொடங்கினார். மகாராஜாவின் முன்னிலையில் ஊர் மக்களும், அக்ரகாரத்துக் காரர்களும், கலை அரங்கில் ஒருங்கிருந்து புலவர் பாடிவிளக்கம் சொன்ன ராமாயணத்தைக் கேட்டு ரசித்தார்கள். “முதலில் ஒரு வாரம் மட்டும் நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த மருதப்பர் புலவரின் புலமையைக் கண்டு வியந்து பத்து நாட்களுக்கு நிகழ்ச்சியை நடத்தச் சொல்லி ஒவ்வொரு நாளும் தானும் அமர்ந்து புலவரின் கதைபாடல்களைக் கேட்டு ரசித்தார். முடிவில் புலவருக்கு, மருதப்பர் கணிசமான அளவு அன்பளிப்புகளையும் கொடுத்து அவரை மகிழ்வித்தார்” என்று இருதாயல மருதப்பர் காலத்தில் நடந்த இந்நிகழ்வை நினைவு கூர்ந்தார் ஊத்துமலையைச் சேர்ந்த வித்வான் தங்கப் பாண்டியனார். மருதப்பரின் தமிழ்ப் பற்றையும், கலை ரசனையையும் இத்தரவால் நாம் அறிந்து கொள்ள முடிகிறது

அன்ன பூரணத்தம்மாளின் அவலக் கதை

தமிழகத்தைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து அப்பகுதிகளை ஜமீன்தார்கள் ஆண்டு வந்தார்கள். எங்கள் பகுதி ஊத்துமலை ஜமீனைச் சேர்ந்தது. சில ஜமீன்களின் வரலாறுகள் ஆதாரபூர்வமாக (தக்க சான்றாதாரங்களுடன்)எழுதப்பட்டுள்ளது.

ஊத்துமலை என்ற ஊரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த ஊத்துமலை ஜமீனின் வரலாற்றை இதுவரை யாரும் முழுமையாகத் தொகுத்துத் தரவில்லை. ஊத்துமலை ஜமீனைப் பற்றி வாய்மொழி வாயிலாக உலவி வந்த பல்வேறு சொல் கதைகளை நான் பல்வேறு இதழ்களில் அவ்வப்போது எழுத்தில் பதிவு செய்துள்ளேன்.

சமீபத்தில் ஊத்துமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு.. மருது பாண்டியன் அவர்கள், ஊத்துமலை ஜமீனின் வரலாற்றை முறையாகத் தொகுத்து, "ஊத்துமலை ஜமீன் தமிழ் வளர்த்த பூமி" என்ற நூலை வெளியிட்டுள்ளார்.இந்நூலை எழுதுவதற்கான வரலாற்று ஆவணங்களை எல்லாம் அவர், ஆங்கிலேயர்கள் எழுதி வைத்துச் சென்றுள்ள (பதிவு செய்துள்ள) ஆவணங்களில் இருந்தே பெற்றுள்ளார். தமிழர்களுக்கு குறிப்பாகத் தமிழ் அறிஞர்களுக்கு சமகால வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்பு அக்காலத்தில் இருந்ததில்லை என்பதை நாம் மறுக்க முடியாது.

அந்நூலில் ஊத்துமலை ஜமீனை ஆண்ட ஜமீன்தார்களில் மிகவும் புகழ்பெற்றவரும், மக்களால் போற்றப்பட்டவரும் தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவருமான இருதாலய மருதப்ப பாண்டியரின் வரலாற்றை மிகச் சிறப்பாகத் தொகுத்துத் தந்துள்ளார்.

இருதாலய மருதப்ப பாண்டியரின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்து காணப்படும் அன்ன பூரணம் என்ற பெண்ணின் கதை உள்ளபடியே அந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்களின் ஆதிக்க வெறிக்கும், அதிகார மோகத்திற்கும், இடையே அன்ன பூரணம் என்ற சிறுமி அகப்பட்டு அவள் அனுபவித்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எல்லாம் விதியின் செயல் என்று ஒரே வார்த்தையில் விடை சொன்னாலும், அன்னபூரணம் வடித்த கண்ணீரின், அனுபவித்த துன்பத்தின் சுமை மிகவும் அதிகம்.

அன்ன பூரணத்தம்மாளின் கதையை மிகச் சுருக்கமாக வாசகர்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

ஊத்துமலை ஜமீனின் புதியதலை நகரமாக வீர கேரளம் புதூரை அறிவித்து அங்கு ஒரு அழகிய அரண்மனையைக் கட்டி, அதில் குடி பெயர்ந்து ஆட்சி செய்கிறார் இருதாலய மருதப்ப பாண்டியன்.

ஊத்துமலைக்கு அருகில் உள்ளது குருக்கள்பட்டி என்ற ஊர். குருக்கள் பட்டியில் அழகப்பத்தேவர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் வேட்டையாடுவதில் வல்லவர். எனவே, அவருடன் மருதப்பர் அடிக்கடி, ஊத்துமலைக் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றார்.

ஒரு நாள் வேட்டையின் போது மருதப்பரை கருநாகப்பாம்பு ஒன்று தீண்ட வருகிறது. தக்க சமயத்தில் அழகப்பத் தேவர் கருநாகப் பாம்பை வெட்டி ரெண்டு தூண்டாக்கிக் கொன்று மருதப்பரின் உயிரைக் காக்கின்றார்.

தன் உயிரைக்காத்த அழகப்பத் தேவருக்கு அன்று மாலையே வீரகேரளம் புதூரில் உள்ள தன் அரண்மனையில் தடபுடலாக விருந்து கொடுத்து,அவருக்குத் தேவையான பொன் பொருள்களையும், தனக்குப் பிரியமான, குதிரை ஒன்றையும் தானமாகக் கொடுத்து அழகப்பத்தேவரை கௌரவித்த மருதப்பர், "உமக்கு வாரிசாக இருக்கும் ஒத்த ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கைக்கும் நானே பொறுப்பேற்கிறேன்" என்று சொல்கிறார்.

பொன், பொருளைப் பெற்ற போதையில் அழகப்பத் தேவர், மருதப்பர் சொன்ன வார்த்தைகளின் பொருளை தனக்குச் சாதகமாக (வேறு விதமாக)புரிந்துகொள்கிறார். விதி இங்குதான் விளையாட ஆரம்பிக்கிறது.

மருதப்பர், குருக்கள்பட்டி அழகப்ப தேவரின் மகளின் நல் வாழ்விற்காக, அப்பெண்ணிற்குத் திருமணம் நடைபெறும் போது, நகை நட்டுகளைச் செய்து கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அழகப்பத் தேவரிடம் "உம் மகளின் வாழ்க்கைக்கும் நான் பொறுப்பு" என்று கூறினார்.ஆனால் அழகப்பத் தேவரோ, மருதப்பரே தன் வாயில் சொன்னதால், ‘உன் மகளுக்கு நானே வாழ்க்கை கொடுக்கிறேன் (அவளைத் திருமணம் செய்து கொண்டு) என்று வேறுவிதமாகப் பொருள் புரிந்து கொள்கிறார்.

குறுந்தன் மொழி என்ற ஊரைச் சேர்ந்த மீனாட்சி சுந்தர நாச்சியார் என்ற பெண்ணைப் பார்த்ததில் இருந்து அவளின் அழகில் மயங்கி, அவளையே ஒரு தலையாகக் காதலிக்கின்றார் மருதப்பர்.

சாதாரண குடிமக்களில் இருந்து தனக்கான வாழ்க்கைத் துணையை ஜமீன்தார்கள் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் மருதப்பர் குறுந்தன் மொழியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரி என்ற பெண்ணைப் பல எதிர்ப்புகளுக்கு இடையே 1864-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி, வீரகேரளம் புதூரில் உள்ள தனது அரண்மனையில் வைத்து மணமுடித்துக் கொள்கிறார்.

மணவிழாவில் குருக்கள் பட்டி அழகப்பத் தேவர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. "தன் உயிர் காத்த நண்பர் தன் திருமணவிழாவில் கலந்துகொள்ள வில்லையே" என்று நினைத்து மருதப்பர் மனவருத்தம் கொள்கிறார். அழகப்பத் தேவரை அழைத்து வர ஆள் அனுப்புகிறார்.அப்போதும் அழகப்பத் தேவர் வரவில்லை. எனவே மணக்கோலத்தில் இருந்த மருதப்பரே தன் நண்பரைத் தேடி குருக்கள் பட்டிக்குச் செல்கிறார்.

மணக்கோலத்தோடு, தன் வீடு தேடி வந்த மன்னர் மருதப்பரை, முகம்வாடிய நிலையில் அழகப்பத் தேவர் வரவேற்கிறார். மருதப்பர்,அழகப்பரிடம், நான் முறைப்படி என் திருமணத்திற்கு ஓலை அனுப்பினேன். நீர் என் திருமணத்திற்கு வரவில்லை. பிறகு ஆள் அனுப்பி உங்களை அழைத்து வரச் சொன்னேன் அப்போதும் தாங்கள் தக்க பதிலும் சொல்லி அனுப்பவில்லை. நேரிலும் வரவில்லை. "என் மேல் தாங்களுக்கு அப்படி என்ன கோபம்? என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் நேரில் வந்தேன்" என்றார்.

அழகப்பத் தேவர், "தாங்களின் உயிரை நாகப்பாம்பிடம் இருந்து காத்த அன்று தாங்கள் உன் மகளின் வாழ்க்கைக்கு நான் பொறுப்புஎன்று சொன்னீர்கள். எனவே, தாங்கள் என் மகளைத்தான் திருமணம் செய்து கொள்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் இன்று வேறு ஒரு பெண்ணுக்கு மாலையிட்டு, தாங்கள் வாக்குமீறி விட்டீர்கள். எனவேதான் நான் உங்கள் திருமணத்திற்கு வரவில்லை" என்றார்.

"தான் சொன்னதைத் தன் நண்பன் தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டுள்ளானே." என்று மன வருத்தப்பட்ட மருதப்பர், கொடுத்த வாக்கை மீறக்கூடாது என்ற காரணத்திற்காக, அப்போதே அவ்வூர் மக்களின் முன்னிலையில், ஒரு மாலையை வாங்கி, அன்ன பூரணம் என்ற சிறுமிக்குச் சூட்டி, "இவளும் இனி என் மனைவிதான் நான் என் நண்பனுக்குக் கொடுத்த வாக்கை அவரின் விருப்பப்படி நிறைவேற்றி விட்டேன்" என்று அறிவித்தார். அப்போது அழகப்பத் தேவரின் மகளான அன்ன பூரணிக்கு சுமார் பத்து வயதுதான் இருக்கும்.

சிறுமி அன்ன பூரணிக்கு எல்லாமே விளையாட்டாகத் தெரிந்தது. குருக்கள் பட்டி அழகப்பத்தேவர் ஜமீன் சொத்துக்களுக்கு வாரிசாக வேண்டும் என்ற உள் நோக்கத்திற்காகத்தான் தன்மகளையே பகடைக் காயாக வைத்து விளையாடுகிறார் என்ற விபரம் யாருக்கும் தெரியவில்லை.

அன்னபூரணி என்ற சிறுமிக்கு ரெண்டாந்தாரமாக மாலையிட்டுள்ளார் மன்னர் மருதப்பர் என்ற சேதி(செய்தி) காற்றில் பரவியதும், மருதப்பரின் தாயார் பெரிய நாயகி அம்மாள், தன் மகனான மருதப்பரை அழைத்துக் கண்டித்தார்.

"கொடுத்தவாக்கைக் காப்பாற்றத்தான் அச்சிறுமிக்கு மாலை சூடினேன்" என்று விளக்கம் சொல்லியும், மருதப்பரின் தாயார் அச்சமாதானத்தை ஏற்றுக் கொள்ளாமல், தான் பிறந்த ஊரான சொக்கம்பட்டிக்குச் (சொக்கம்பட்டி ஜமீன்தாரின் அரண்மனைக்கு) சென்று விட்டார்.

மீனாட்சி சுந்தரி அம்மாளின் வீட்டாரும், மருதப்பர் மறுமணம் செய்து கொண்டதை விரும்பவில்லை. எனவே குருக்கள்பட்டி அழகப்பத்தேவருக்கும் அவரின் மகளான அன்னபூரணிக்கும் சொக்கம்பட்டி ஜமீன்தாரின் வகையறாக்காரர்களும், குறுந்தன் மொழியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தர நாச்சியாரின் வகையறாக்காரர்களும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தார்கள்.

அன்னபூரணம் என்ற சிறுமியின் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை வந்தது. எனவே, அழகப்பத் தேவர் தன் மகளை அழைத்துக்கொண்டு வீர கேரளம் புதூர் அரண்மனைக்கு வந்து, மன்னர் மருதப்பரிடம், "உமது மனைவியும், என் மகளுமான அன்னபூரணத்திற்கு,உமது மூத்தமனைவியின் குடும்பத்தினராலும், உமது தாய்மாமனா சொக்கம்பட்டி ஜமீன்தாராலும் எந்த நேரமும் தீங்கு நேரலாம். எனவே, நீர் உமது ரெண்டாவது மனைவியான அன்னபூரணத்திற்கு அரண்மனைக்கு அருகிலேயே ஒரு வீட்டை ஏற்பாடுசெய்து கொடுத்து, அவளுக்குத் தேவையான வசதி வாய்ப்புகளையும் செய்து கொடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, மருதப்பரும், வீரகேரளம் புதூரில் உள்ள தன் அரண்மனைக்கு அருகிலுள்ள லட்சுமி விலாஸ் என்ற மாளிகை ஒன்றை ஒதுக்கிக் கொடுத்து. அங்கு அழகப்பத் தேவரையும் அவரின் மகளான அன்னபூரணத்தையும் தங்கச் சொன்னார்.

பருவ வயதை அடையாத, உலக நடப்புத் தெரியாத அன்னபூரணி என்ற சிறுமிக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது கூடப் புரியவில்லை.அவள் விளையாட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட்டுப் பராக்கில் அலைந்தாள்.

லட்சுமி விலாசுக்கு அன்னபூரணி குடி வந்ததால், மீனாட்சி சுந்தர நாச்சியார் கோபம் கொண்டார். ஏற்கனவே மருதப்பரின் தாயார் பெரிய நாயாகி அம்மாள் கோபித்துக் கொண்டு சொக்கம்பட்டி சென்றவர் திரும்பி வரவேயில்லை.

மருதப்பர் "வாக்குக் கொடுத்து இப்படி ஒரு வேண்டாத சிக்கலில் மாட்டிக் கொண்டோமே" என்று நினைத்து மனம் வருந்தினார்.

கலை, இலக்கிய ஈடுபாடு, வேட்டைக்குச் செல்வது, அரச பரிபாலனம் என்று நீரோட்டமாகப் போய்க் கொண்டிருந்த மருதப்ப பாண்டியரின் வாழ்வை அழகப்பத் தேவரின் பணத்தாசையும், பதவி மோகமும் நிலைகுலையச் செய்தது.

நாளாக, நாளாக அழகப்பத் தேவர் அரண்மனையில் தன் செல்வாக்கை நிலைநாட்ட முயன்றார். தம் மகளுக்கும் ஜமீனில் சகல உரிமையும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனால் மருதப்பருக்கும் அழகப்பத் தேவருக்கும் இடையே மனத் தாங்கல் ஏற்பட்டது.

அழகப்பத்தேவரின் சூழ்ச்சியால்தான், மனைவியையும், தாயையும் பிரிந்து வாழ்கிறோம் என்பதை உணர்ந்து கொண்ட மருதப்பர், அழகப்பரின் உறவை எப்படியாவது முறிக்க வேண்டும் என்று யோசித்து, தன் இரண்டாவது மனைவியான சிறுமி அன்னபூரணத்தை விவாகரத்து செய்து ஓலை அனுப்பினார். அப்போதும் அன்னபூரணி என்ற சிறுமி வயசுக்கு வரவே இல்லை.

(தொடரும்)

திருடன் பெற்ற பதவி

திருநெல்வேலிக்கு அருகில் 18-ஆம் நூற்றாண்டில் ஊத்துமலை ஜமீன் என்ற சமஸ்தானம் இருந்தது.

ஊத்துமலை சமஸ்தானத்தை ஆண்ட ஜமீன்தார்களில் இருதாலய மருதப்ப பாண்டியன் மிகவும் பேசப்படுகிறார். அவரைப் பற்றியும் அவரின் ஆட்சிக்காலச் சிறப்புகளைப் பற்றியும் இன்றும் மக்கள் கதைகதையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஊத்துமலை என்ற கிராமத்தைச் சேர்ந்த வித்வான் தங்கப் பாண்டியன் என்ற தகவலாளர் கூறிய ஒரு சேதியை மட்டும் இங்கே, பதிவு செய்ய விரும்புகிறேன்.

‘சேதி’க்குள் செல்லும் முன் தகவலாளரைப் பற்றிய சில சுவாரஸ்யமான செய்திகளைக் கூறி விடுகிறேன். இன்றைக்கு இவருக்கு சுமார் 75 வயதாகிறது. செக்கச் செவேல் என்று பழுத்த பழமாகக் காட்சியளிக்கிறார்.

தங்கப் பாண்டியனார், எந்தக் கல்விக் கூடத்திற்கும் சென்று பெரிய படிப்பு எதையும் படித்தவரல்ல. குரு குலத்திற்குச் சென்று அடிப்படையான கல்வி அறிவை ஏட்டுப்படிப்பின் மூலம் பெற்றிருக்கின்றார்.

அதன் பின் தானே முயன்று பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்திருக்கிறார். இன்று தொல்காப்பியம் நன்னூல் போன்ற இலக்கண நூல்களுக்கும், பன்னிரு திருமுறைகள் போன்ற இலக்கிய நூல்களுக்கும் உரை எழுதும் அளவிற்குப் புலமை பெற்றுள்ளார்.

சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் நூல்களை, குறிப்பாக, ரெட்டியார் எழுதிய காவடிச் சிந்து என்ற நூலின் பெருமைகளை இப்பகுதி மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அந்நூலை மக்கள் மன்றத்தில் புகழ் பெறச் செய்துள்ளார்.

இடுப்பில் ஒரு நாலு முழ வேட்டி. மேலுக்கு ஒரு துண்டு. இவை மட்டுமே இவரின் ஆடைகள், கழுத்தில் ஒரு உத்திராட்சை மாலையும் அணிந்துள்ளார். காலுக்குச் செருப்பும் போட்டுக் கொள்வதில்லை. ஆடைக்கும் கோடைக்கும், பனிக்கும், குளிருக்கும் மேலுக்குச் சட்டை அணிந்து கொள்வதில்லை.

சிவப்பழமாக நெற்றி நிறைய திருநீறும் பூசி இருக்கும் தங்கப்பாண்டியனார் எந்தப் பல்கலைக் கழகத்திலும் படித்துப் பட்டம் வாங்கிவரல்ல. ‘வித்வான்’ என்ற அடை மொழி மக்கள் கொடுத்ததுதான்.

இனி, தகவலாளர், சிவப்பழம் தங்கப்பாண்டியனார் சொன்ன சேதியைப் பார்ப்போம்.

இருதாலய மருதப்ப பாண்டியன் ஆட்சிக் காலத்தில் நடந்த சம்பவம் இது. ஜமீன்தாருக்குச் சொந்தமாக ஏகப்பட்ட மாந்தோப்புகள் ‘தாயார் தோப்பு’ என்ற ஊரில் இருந்தது.

தோப்புக் காவலுக்கு என்று நாலைந்து காவல்காரர்களை ஜமீன்தார் நியமித்து இருந்தார். தோப்பு என்றால் ஏக்கர் கணக்கில் அல்ல. மைல் கணக்கில் இருந்தது.

குற்றாலத்தில் சீசன் ஆரம்பிக்கும் சமயத்தில் மாந்தோப்புகளில் மரம் கொள்ளாமல் காய்கள் காய்த்துத் தொங்கும். ஜமீனுக்குச் சொந்தமான மாந்தோப்புகளில், பொது மக்கள் யாரும் சென்று மாங்காய்களைப் பறிக்க மாட்டார்கள். ஜமீன்தார் மீது அந்த அளவுக்கு மரியாதை கலந்த பயம் மக்களுக்கு இருந்தது.

இந்த ஆண்டு மாங்காய் சீசன் ஆரம்பித்த போது தாயார் தோப்பில் உள்ள மாமரங்களில் தினமும் இரவில் குறிப்பிட்ட அளவில் மாங்காய்கள் களவு போய்க் கொண்டே இருந்தது.


காவல்காரர்கள் பகலில் பார்க்கும் போது சில மாமரங்களில் மாங்காய்கள் பறிக்கப் பட்டிருப்பது தெரிகிறது. ஆனால் இரவில் மாங்காய் திருடும் திருடனைப் பிடிக்க முடியவில்லை.

தோப்போ, விரிந்து பரந்து கிடந்தது. காவல்காரர்களோ. நான்கு பேர் மட்டும் தான் இருந்தார்கள். எனவே ஒருபக்கம் இல்லை என்றால் இன்னொரு பக்கம் திருடன் எப்படியோ, காவல் காரர்களின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டுத் தன் ‘கைவரிசை’யைக் காட்டிக் கொண்டிருந்தான்.

மாந்தோப்பில் மாங்காய்களைத் தினமும் திருடும் திருடனை எவ்வளவோ முயன்றும் காவல்காரர்களால் பிடிக்க முடியவில்லை.

கடைசியில் காவல் காரர்கள் நால்வரும் ஜமீன்தாரிடம் வந்து, மகாராஜா நம் மாந்தோப்பில் தினப்படி யாரோ ஒரு திருடன். தான் சுமக்கும் பாரம் (ஒரு ஆள் சுமக்கும் அளவுக்கு) மட்டும் மாங்காய்களைத் திருடிக் கொண்டிருக்கிறான். காவல்காரர்களாகிய நாங்கள் நால்வர் மட்டும் இருப்பதால் சுமார் ஒரு மாத காலம் ஆகியும் அந்தத் திருடனை எங்களால் பிடிக்க முடியவில்லை. அரண்மனையில் இருந்து கூடுதலாகச் சில காவல்காரர்களையோ, வீரர்களையோ, எங்களுக்குத் துணையாக அனுப்பினால் தான் அந்தத் திருடனைப் பிடிக்க முடியும்’ என்றார்கள்.

காவல்காரர்கள் சொன்னதைக் கேட்ட மகாராஜா, அன்று இரவே ரகசியமாக, கூடுதலாக நாற்பது காவல்காரர்களை மாந்தோப்பின் காவலுக்கு அனுப்பினார்.

அரண்மனையில் இருந்து கூடுதல் காவல்காரர்கள், மாந்தோப்பின் காவலுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை அறியாத திருடன் வழக்கம் போல் மாந் தோப்பிற்குத் திருடச் சென்றான். எனவே இருட்டில் மறைந்திருந்த அரண்மனைக் காவல் வீரர்கள் திருடனைக் கையும்களவுமாகப் பிடித்து விட்டார்கள்.

மறுநாள் காலையில், மாங்காய் திருடிய திருடனையும் அவன் பறித்துச் சாக்கில் வைத்திருந்த மாங்காய்களையும் மகாராஜாவின் முன்னால் ஆஜர்படுத்தினார்கள்.

மாங்காய் திருடிய திருடனைப் பார்த்ததும், அவனை ஏற்கனவே எங்கோ பார்த்த ஞாபகம் இருக்கிறதே என்று மகாராஜா யோசித்தார்.

சுமார் இரண்டுமாதங்களுக்கு முன்னால் இதே ஆசாமி அரண்மனைக்கு வந்து காவல்காரன் வேலை வேண்டும் என்று கேட்டதும் இப்போதைக்குக் காவலுக்கு ஆள் தேவை இல்லை. தேவைப்படும் போது சொல்லி அனுப்புகிறேன் என்று பதில் சொல்லி அனுப்பியதும் மகாராஜாவின் நினைவுக்கு வந்தது. என்றாலும் அதை வெளியே சொல்லாமல், திருடனைப் பார்த்து யப்பா, உன் பெயரென்ன..? நீ என்ன வண்ணம் (ஜாதி), ஏன் என் தோப்பில் மாங்காய்களைத் திருடினாய்? என்று கேட்டார்.

திருடன் மிகத் தைரியமாக "மகாராஜா, நான் சிங்கம் பட்டி ஜமீனைச் சேர்ந்தவன். எனக்கு ஒத்தக்கு ஒரு பொட்ட புள்ளை மட்டும் தான். என் பொண்டாட்டியும் செத்துட்டா. நான்தான் என் மகிளை வளர்த்து ஆளாகக் கினேன். என் மகளை இங்கே ஊத்துமலையில் தான் கட்டிக் கொடுத்திருக்கு. நானும் என் மகளுடன்தான் குடியிருக்கிறேன். என் மகளுக்கு ஒரு கால் ஊனம் அவளால் காடு, கரைகளுக்குச் சென்று வேலை, ஜோலி பார்க்க முடியாது. சமீபத்தில் மூணு மாசத்துக்கு முன்னால என் மருமகனும் காலமாயிட்டார். என் மகளுக்கு, ரெண்டு பிள்ளைகள் இருக்கு. எனக்கும் வயசாயிட்டு, அங்க சிங்கம் பட்டி ஜமீன்ல நான் காவல் வேலைதான் பார்த்துகிட்டு இருந்தேன். எனக்கு வேற விவசாய வேலைகள் ஒண்ணும் பார்க்கத் தெரியாது.

கால் நடக்க முடியாத சித்தனுதலி (இளம் விதவை) யான பொட்டப்பிள்ளையையும், அவள், வயிற்றில் பிறந்த ரெண்டு பச்சை மதலைகளையும்(குழந்தைகளையும்) காப்பாத்தத்தான். நான் ரெண்டு மாதங்களுக்கு முன்னால் உங்களிடம் வந்து காவல் வேலை கேட்டேன். நீங்கள், "இப்போதைக்குக் காவல் வேலைக்கு ஆள் தேவை இல்லை!" என்று சொல்லி விட்டீர்கள்.

எத்தனை நாள்தான். நானும், என் மகனும், பேரன், பேத்தியும் பட்டினி கிடக்க முடியும்? எனவேதான் எங்கள் வயிற்றுப் பாட்டிற்காக (சாப்பாட்டிற்காக) நான், உங்கள் மாந்தோப்பிற்குச் சென்று ஒராளம் சுமைக்கு மட்டும் மாங்காய்களைப் பறித்து அதை வெளியூருக்குக் கொண்டு சென்று விற்று என் கால ஜீவனைக் கழித்தேன். நேற்று அரண்மனைக் காவலர்களிடம் கையும் மெய்யுமாக மாட்டிக் கொண்டேன் மகாராஜா, நான் செய்திருப்பது தப்புதான் தாங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்" என்றான்.

மகாராஜா திருடனைப் பார்த்து "எப்பா, என் குடும்ப நிலை இப்படி, என்று முதலில் நீ காவல் வேலை கேட்டு வரும் போதே, என்னிடம், விளக்கமாகச் சொல்லி இருந்தால் அன்றே உனக்கு ஏதாவது ஒரு வேலையை அரண்மனையிலேயே போட்டுக் கொடுத்திருப்பேன். நீ, திருடியதில் எந்தத் தப்பும் இல்லை. உன் வயிற்றுப் பாட்டிற்காக, உன் தேவைக்கு மட்டும், தினமும் திருடி இருக்கிறாய். தொடர்ந்து தினமும் திருடினாலும், காவலர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் மிகத் திறமையாகத் திருடி இருக்கிறாய். உனக்கு வேலை கொடுக்காதது என் தப்புதான். உன் மேல் எந்தத் தப்பும் இல்லை. உடல் ஊனமுற்ற மகளுக்காகவும் பசியோடு இருக்கும் குழந்தைகளுக்காகவும் அரண்மனைக்குச் சொந்தமான தோப்பில் திருடி இருக்கிறாய். அது ஒரு பெரிய குற்றம் இல்லை. இன்று முதல் – நீ தினமும் மாங்காய் திருடிய மாந்தோப்புகளுக்கு, உம்மையே தலைமைக் காவலனாக நியமிக்கிறேன். உம் மகளின், பேரக் குழந்தைகளின் பசியைப் போக்க, ஒரு மாதச் சம்பளத்தை முன் பணமாகக் கொடுக்கச் சொல்கிறேன். அதைப் பெற்றுக் கொண்டு, உம் குடும்பத்தின் பசியைப் போக்கிக் கொண்டு, நாளை முதல் தோப்புக் காவலை ஏற்றுக் கொள்ளும் என்றார்.

திருடனைப் பிடித்து வந்த காவலர்களுக்கு மகாராஜாவின் தீர்ப்பு வியப்பைக் கொடுத்தது. தீர்ப்பின் மகத்துவம் அங்கு கூடி இருந்த பெரியவர்களுக்கும், புலவர்களுக்கும், திருடனுக்கும் மட்டும் புரிந்தது.

சுமார், இருநூறு வருசங்களுக்கு முன்பு, ஊத்துமலை ஜமீன்தார், இப்படி மனித நேயத்தோடு ஏழை, எளிய மக்களின் பால் அன்பு கொண்டு ஆட்சி செய்தார். அன்று இருதாலய மருதப்ப பாண்டியர் காட்டிய அணுகுமுறை இன்றைய ஆட்சியாளர்களும் சிந்திக்கும் வண்ணம் உள்ளது என்று சேதியைச் சொல்லி முடித்தார் வித்வான் தங்கப் பாண்டியனார்.