Sunday, November 4, 2012

பவுண்டுத் தொழு - மாடுகளின் சிறைச்சாலை

மனிதர்கள் தப்பு செய்தால் அவர்களைச் சிறையில் அடைத்து வைப்பதைப் போல் மாடுகள் தவறு செய்தால் அவைகளையும் அடைத்து வைக்கச்சிறைகள் இருந்தது உங்களுக்குத் தெரியுமா?” என்று ஒரு பெரியவர் என்னிடம் கேட்டனர்.
பெரியவர் சொன்ன ‘சேதி’ எனக்கு வியப்பாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருந்தது. எனவே, “தெரியாது சொல்லுங்கள் தாத்தா” என்றேன்.

பெரியவர் பேச ஆரம்பித்தார். அந்தக் காலத்தில் வீடு தவறாமல் சம்சாரிகளிடம் காளை மாடுகள் இருக்கும், அது தவிர பாலுக்காக எருமை மாட்டையோ, பசுமாட்டையோ வளர்ப்பார்கள். கிராமத்தில் சம்சாரி விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்ந்தால் அவன் பாடு தவிடு தாங்கிப் போகும் (மோசமாகி விடும்) எனவே விவசாயத்தோடு உபதொழிலாகக் கால் நடை வளர்ப்பையும் சேர்த்துச் செய்வார்கள். வீடுகளுடன் கன்று, காளைகளைக் கட்டிப் பேணி வளர்க்க என்று மாட்டுத் தொழுவத்தையும் சேர்த்துக் கட்டிக் கொள்வார்கள்.

ஒரு மனிதன் அடுத்தவன் தோட்டத்தில் புகுந்து, தேங்காயையோ, மாங்காயையோ பறித்தால், அவனைத் தோட்டத்தின் காவலாளி பிடித்து, தோட்டத்தின் உரிமையாளரிடம் ஒப்படைப்பார். தோட்டத்தின் உரிமையாளர் காவல்துறையினரிடம் ஒப்படைப்பார். காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் திருடனை நீதிமன்றத்தில் ஒப்படைப்பர். நீதிபதி தீர விசாரித்து திருட்டு ‘ருசுப்பட்டால்’ (நிரூபிக்கப்பட்டால்) திருடன் இத்தனை மாதம் சிறையில் இருக்க வேண்டும் என்று தண்டனை கொடுப்பார்.

இதேபோல் சில மாடுகள் அடுத்தவன் நஞ்சையில் அல்லது புஞ்செயில் மேய்ந்து மகசூலை அழித்து விட்டால் அந்த மாட்டைப் பிடித்து வந்து வயலின் உரிமையாளர் பவுண்டுத் தொழுவில் அடைத்து விடுவார். “அது என்ன பவுண்டுத் தொழு?” என்று நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. மாடுகளை (பிற சம்சாரிகளின் பயிர்களில் மேய்ந்து அழிமதி செய்த மாடுகளை) பிடித்து வந்து ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு நேரே, கிராம முனிசிப் வீட்டிற்குப் போவார்கள். அவருக்கு வீடும் அதுதான் ஆபீசும் அதுதான். வீட்டின் ஒரு பகுதியையே ஆபீசாக வைத்திருப்பார். இன்னேரம் தான் ஆபீசில் இருக்க வேண்டும் என்ற கணக்கு வழக்கெல்லாம் அந்தக் காலத்து கிராம முனிசிப்களுக்கு கிடையாது. எப்போது வேண்டுமானாலும், பொது மக்கள் போய் கிராம முனிசிப்யைச் சந்தித்துப் பேசலாம்.

கிராமுனிசிப் அவசர வேலையாக எங்காவது வெளியூர் போனால் அவருக்குப் பதில் உள்ளூரிலேயே தலையாரி, இருப்பார். அவரைச் சந்தித்து விபரம் கூறலாம். போனவர் “இன்னமாதிரி என் மகசூலை, இன்னாருக்குச் சொந்தமான எருமை மாடு மேய்ந்து விட்டது” என்று பிராது (புகார்) சொல்வார். உடனே கிராம முனிசிப் பவுண்டுத் தொழுவின் சாவியை தலையாரியிடம் எடுத்துக் கொடுத்து அந்த எருமை மாட்டைப் பவுண்டில் அடைத்து விடும் என்பார்.

தலையாரி பவுண்டுத் தொழுவின் சாவியை வாங்கிக் கொண்டு, பவுண்டுத் தொழுவின் பக்கம் செல்வார். மகசூலை மேய்ந்த மாட்டைப் பத்திக் கொண்டு புஞ்சைக்காரர் சென்று பவுண்டுத் தொழுவிற்குள் பத்தி விட்டு வெளியே வந்து விடுவார். உடனே தலையாரி பவுண்டுத் தொழுவை பூட்டிச் சாவியை கிராம முன்சீப்பிடம் ஒப்படைத்து விடுவார். இதுதான் தப்பு செய்த மாடுகளைச் சிறையில் அடைக்கும் நடைமுறை. இந்தமாதிரி அடுத்தவர் மகசூலை மேய்ந்து விடும் மாடுகளை அடைக்க அந்தக் காலத்தில் ஊர்தோறும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு கட்டிடத்தைக் கட்டி இருந்தார்கள்.

இந்தக் கட்டிடம் சதுர வடிவமானதாக இருக்கும். சுமார் பத்தடி உயரமான சுற்றுச் சுவர் கொண்டதாக இருக்கும். இச்சுவர் சுண்ணாம்புக் காரை கொண்டும், கருங்கல் கொண்டும் கட்டப்பட்டிருக்கும் சதுர வடிவான கோட்டைச் சுவர் போன்ற இந்தக் கட்டிடத்தில் வடக்கு நோக்கி ஒருவாசல் மட்டும் இருக்கும். வாசலையும் இரும்புக் கம்பி போட்ட கதவால் மூடி இருப்பார்கள். இதுதான் பவுண்டுத் தொழு என்பது.

இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் சிறிய ஓட்டுச் சாய்ப்பு இருக்கும். அதில் மேலோரமாக நீண்ட கம்புகளை வைத்துக் கட்டி இருப்பார்கள். சுற்றுச் சுவருக்கும், கம்பு காதுக்கும் இடையில் இப்போது நீள வசத்தில் ஒரு பள்ளம் கிடைக்கும். இந்தப் பள்ளப்பகுதியைத்தான் ‘அழி’ என்று சொல்கிறார்கள். இந்த நீள்வச பள்ளத்தில் வைக்கோலைப் போட்டு வைத்திருப்பார்கள். அதே தொழுவின் மற்றோர் பகுதியில்ஒருகல் தொட்டி கிடக்கும். அதைத் தண்ணீரால் நிரப்பி இருப்பார்கள். பவுண்டுத் தொழுவில் அடைக்கப்பட்டாலும் மாடு பட்டினி கிடக்க வேண்டாம். அங்கு கிடக்கும் வைக்கோலைத் தின்று கொள்ளலாம். பவுண்டுத் தொழுவிற்குள் இருக்கும் கல் தொட்டியில் தண்ணீர் குடித்துக் கொள்ளலாம்.

மாடுகளுக்குத் தண்டனை கொடுத்து அதைச் சிறையில் அடைத்தாலும் அதற்குத் தீவனமும் கொடுத்து அம்மாட்டின் பசியைப் போக்க வேண்டும், தாகத்திற்கு தண்ணீர் குடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மழைக்கும், வெயிலுக்கும் அம்மாடுகள் ஒதுங்க ஒரு சாவடி (நிழல் தரும் கட்டிடம்) வேண்டும் என்று சிந்தித்து மாட்டின் ஜெயிலை வடிவமைத்திருந்த நம் முன்னோர்களைப் பாராட்ட வேண்டும்.

தலையாரி பவுண்டுத் தொழுவில் மாட்டை அடைத்த செய்தி உடனே ஊருக்குள் பரவி விடும். எனவே, மாட்டின் உரிமையாளர் செய்தி தெரிந்து தலையாரியைத் தேடிக்கொண்டு கிராம முனிசிப் அலுவலகத்திற்கு வந்து விடும். கிராம முனிசிப் தலையாரியை அனுப்பி ஊர் நாட்டாமையைக் கூட்டிக் கொண்டு வரச்சொல்வார். நாட்டாமை வந்ததும், கிராம முனிசிப், நாட்டாமையுடன் சென்று மாடு மேய்ந்து அழிமதி செய்திருக்கிற இடத்தைப் பார்வையிட்டு அழிமதியைப் பொருத்து பாதிக்கப்பட்ட சம்சாரிக்கு இவ்வளவு பணத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று பேசி முடிவு செய்து மாட்டின் உரிமையாளரிடம் சொல்வார்கள்.

மாட்டின் உரிமையாளர், அத்தொகையை நாட்டாமையிடம் கொடுக்க, நாட்டாமை பாதிக்கப்பட்ட சம்சாரியை அழைத்து அந்த நஷ்ட ஈட்டுத்தொகையைக் கொடுத்து விடுவார். பின்னர் மாட்டைப் பவுண்டில் அடைத்ததால் ஏற்படும் பராமரிப்புச் செலவுக்கு என்று ஒரு தொகையை அரசாங்கத்திற்கு வாங்கிக் கொள்வார்கள். இப்படி பராமரிப்புச் செலவுக்கு என்று வாங்கும் அபராதத் தொகைக்குத் தனியாக ரசீது போட்டுக் கொடுத்து விடுவார், கிராம முனிசிப்.

அந்தக் காலத்தில், ஒரு நாளைக்கு ஒரு மாட்டிற்கு இவ்வளவு பராமரிப்பு செலவு என்று ஒரு கணக்கு இருந்தது. அந்தக்கணக்குப்படி பராமரிப்புச் செலவை மாட்டின் சொந்தக்காரரிடம் வாங்கி விடுவார். மாட்டை ஒருமுறை பவுண்டில் அடைத்தால், ஒருநாளைக்கு உரிய பராமரிப்புத் தொகையைக் கட்டிவிடவேண்டும், மாட்டின் உரிமையாளர் ரெண்டு, மூணு நாட்களாகத் தன் மாட்டை, மீட்க வரவில்லை என்றால் அதற்கு ஏற்ப பராமரிப்பு செலவைக் கூட்டிப் போட்டு அதை மாட்டின் உரிமையாளரிடம் வாங்கி விடுவார் கிராம முனிசீப்.

பவுண்டுத் தொழுவில் அடைபட்ட மாடுகள் போடும் சாணி சவதிகளை அள்ள என்று தனியே ஒரு சிப்பந்தியையும் (ஊழியரையும்) ஊரில் இருந்து நியமித்து இருப்பார்கள். காம்பவுண்டு போன்ற இந்த அமைப்பிற்கு ‘பவுண்டுத் தொழு’ என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியவில்லை! என்று சொல்லிவிட்டு ஒரு குறுஞ்சிரிப்பாணியைச் சிரித்தார். ஏன் சிரிக்கிறீர்கள் இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டேன்.

தாத்தா, தன் நரைத்த மீசையை ஒதுக்கிக் கொண்டு, ஒரு சம்பவத்தை நினைத்தேன்; சிரித்தேன் என்றார். “அது என்ன சம்பவம் சொல்லுங்கள்” என்று நான் ஆர்வத்துடன் கேட்டேன். தாத்தா அந்த சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார். ஒருநாள் நம்மூருக்கு ஒரு களைக் கூத்தாடிக் கூட்டம் வந்திருந்தது. அவர்கள் ஒரு இடத்தில் கூடாரம் போட்டுக் கொண்டு நம்ம ஊரிலும், பிறகு சுற்றுப்பட்டிகளுக்கும் சென்று களைக்கூத்து நடத்தி அதில் வசூலாகும் காசு, பணத்தைக் கொண்டு கஞ்சி காச்சிக் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் நாடோடி மக்கள். ஒரு மாட்டு வண்டியில் தன் தட்டுமுட்டுச் சாமான்களை அள்ளிப் போட்டுக் கொண்டு ஊர், ஊராய் போய் முகாமிட்டு, வித்தை காட்டிப் பிழைக்கிறதுதான் அவர்கள் தொழில். அதுஒரு ஒத்தக்காளை வண்டி அந்த வண்டிதான் அவர்களுக்கு வீடு. வண்டிக்கு கீழே, ஒரு கூண்டு தொங்கும். அதற்குள், ‘காடை, கருவாலி’ என்று ஏதாவது சில பறவைகள் கிடக்கும். வண்டிக்குள் (கூண்டு வண்டிக்குள்) தொங்கும் கூண்டுக்குள் கிளி ஒன்று கிடந்தது. ‘கீக்கீ’ என்று கத்திக் கொண்டே இருக்கும். ஊர் ஊராய்ச் செல்கிற இந்த நாடோடிகள், கோழிகளும், ஆடுகளும் வேறு வளர்ப்பார்கள். மரத்தடியில் வெட்டவெளியில் தான் இவர்களின் சமையல் நடக்கும். சாப்பாடும் அதே மரத்தடியில்தான் நடக்கும்.

இந்த நாடோடிக் கூட்டத்தினரின் காளை ஒரு சம்சாரியின் வெள்ளாமையில் விழுந்து மேய்ந்து விட்டது. வயல்காரனும் தலையாரியிடம் சொல்ல, தலையாரி, பவுண்டுத் தொழுவின் சாவியை எடுத்து வந்து அந்த மாட்டைப் பவுண்டுத் தொழுவிற்குள் அடைத்து விட்டார். (அன்று பார்த்து கிராம முனிசீப் ஊரில் இல்லை. அத்தோடு தலையாரிக்கும் இது களைக் கூத்தாடியின் மாடுதான் என்பது தெரியாது).

தலையாரிக்கு பவுண்டில் அடைத்த பின்தான் அது களைக்கூத்தாடியின் மாடு என்று தெரிந்தது. களைக்கூத்தாடி, ‘ஐயா, சாமி, என் மாட்டைத் திறந்து விடுங்கள்’ என்று கெஞ்சினான். தலையாரி, எனக்கு பவுண்டில் அடைக்க மட்டும்தான் அதிகாரம் உண்டு. கிராம முன்சீப் வந்த பிறகு கட்டவேண்டிய தண்டத்தை (அபராதத்தை) கட்டிவிட்டு வா. அதன்பிறகு தான் பவுண்டில் அடைத்த மாட்டைத் திறந்து விட முடியும்’ என்று சொல்லி விட்டார்.

களைக்கூத்தாடி, அன்று இரவு புறப்பட்டு அடுத்த ஊருக்குப் போக வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தான். அதற்குள், அவன் வண்டி மாட்டைப் பிடித்து பவுண்டில் அடைத்து விட்டார்கள். களைக்கூத்தாடியும், கிராம முன்சீப்பின் வீட்டு வாசலில் ராத்திரி பத்துமணி வரை காத்துக் கிடந்து பார்த்தான். கிராம முனிசீப்பின் மனைவி, ‘ஏய் களைக்கூத்தாடி. இங்கே என் வீட்டு முன்னால் “வயனம் காக்காதே” (உண்ணா நோன்பிருக்காதே) அவர் வர ரெண்டு மூணு நாளாகும். போய் ஊர் மடத்தில் படுத்து உறங்கு என்று சொல்லி விரட்டி விட்டாள்.

மறுநாள் காலையில் தலையாரி விடிந்ததும் விடியாமலும் இருக்கிற நேரத்தில் பவுண்டுத் தொழுவிற்குப் போய் கம்பிக் கதவு வழியாக எட்டிப் பார்த்திருக்கிறார். உள்ளே களைக் கூத்தாடியின் காளை மாட்டைக் காணவில்லை. கதவின் பூட்டும், பூட்டிய படியே தொங்குகிறது. களைக்கூத்தாடி முகாமிட்டிருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தால் அங்கே அவர்களின் வண்டியும் இல்லை; மாடும் இல்லை, அந்த நாடோடிக் கூட்டமும் இல்லை. பொழுது விடிந்ததும், ஊர் முழுவதும் இந்தச் செய்தி பரவி விட்டது. “பவுண்டுத் தொழுவின் பூட்டை உடைக்காமல், எப்படி மாடு வெளியே வந்தது?” என்பது யாருக்கும் புரியாத புதிராக இருந்தது.

அங்கு கூடி இருந்த கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவர் “அவனோ, களைக்கூத்தாடி பாவப்பட்டவன் அவன் வளக்கிற காளையை எப்படிப் பழக்கி இருப்பான்னு உங்களுக்குத் தெரியுமா? ராத்திரி நடுச்சாமம் போல, ஒரு நீண்ட காளையை (மூங்கில் கம்பை) இந்த பவுண்டுக்குள் நீள வசத்தில் போட்டிருப்பான், உரிமையாளனே கயிற்றில் நடக்கும் போது அவன் வளர்க்கும் காளை கம்பில் நடக்காதா? வித்தை தெரிந்த அந்தக்காளை, அந்த மூங்கில் கம்பில் ஏறி நடந்து சுவர் மேல் ஏறி பின் கீழே குதித்திருக்கும். மாடு வெளியே குதித்தபின் களைக்கூத்தாடி பவுண்டுச் சுவரின் மேல் ஏறி மூங்கில் களையையும் எடுத்துக் கொண்டு ஊரை விட்டுப் போயிருப்பான். இதுதான் நடந்திருக்கும். என்று பக்கத்திலிருந்து பார்த்ததைப் போல நடந்த ‘நடப்பை’ விவரித்தார்.

ஊர்க்காரர்களும் ஆமா... இருக்கும் அப்படித்தான் நடந்திருக்கும் என்று பெரியவர் சொன்னதை ஆமோதித்தார்கள். என்று கதை போல் சொன்னவர், அந்தக் களைக்கூத்தாடி செய்த காரியத்தை நினைத்துத்தான் சிரித்தேன் என்ற பெரியவர், முக்கியமான ஒரு குறுந்தகவலையும் சொன்னார். அந்தத் தகவலையும் இங்கே பதிவு செய்கிறேன். “இந்த மாதிரியான பவுண்டு தொழுக்கள் எல்லாம் நவாப்புகள் நம் நாட்டை ஆண்டகாலத்தில் கட்டப்பட்டவை. நவாப்பின் ஆட்சிபோய், வெள்ளைக்காரர்களின் ஆட்சி நடந்த போது, அவர்கள், இந்த பவுண்டுத் தொழுக்களை எல்லாம் தன் கட்டுப்பாட்டில், வைத்திருந்தார்கள்.

வெள்ளைக்காரர்கள் நாட்டை விட்டுப் போகும்போது, இந்த பவுண்டுத் தொழுக்களை எல்லாம் மத்திய அரசின் பராமரிப்பில் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்கள். இன்று பயன்படாமல் பராமரிக்கப்படாமல் தமிழகம் எங்கும் உள்ள இந்த மாட்டு ஜெயில்களை மாநில அரசுகள் தன்தேவைக்குப் பயன்படுத்த முடியாது. சட்டத்திருத்தம், கொண்டு வந்து மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு பெற்றால்தான் உண்டு.

நன்றி : திரு.கழனியூரன் 

செவக்காட்டுச் சேதிகள்

கிராமத்து மக்களின் பேச்சு, நடை உடை, பாவனைகள் கூட சில நேரம் கவித்துவமாக அமைந்துவிடுகின்றன. ஒரு பெண் வயசுக்கு வந்துவிட்டால், அப்பெண்ணின் தந்தையைப் பார்த்து, மற்றவர்கள் ‘பேரன் பிறந்திருக்கிறானா?’ என்று சந்தோசமாக விசாரிப்பார்கள்.
‘மகள் வயசுக்கு வருவதற்கும், பேரன் பிறப்பதற்கும் என்ன சம்பந்தம்?’ என்ற குழப்பம் வெகுநாட்களாக இருந்தது எனக்கு. ஒருநாள் கிராமத்து பெரியவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அது பற்றிக் கேட்டேன்.
அந்தப் பெரியவர், ‘ஒரு பெண் வயதிற்கு வந்து விட்டால் என்றால், அவளின் கர்ப்பப்பை கருவுறுவதற்குத் தயாராக இருக்கிறது’ என்று அர்த்தம். எனவே விரைவில் ‘உன் மகளுக்குத் திருமணமாகட்டும், அவள் வயிற்றில் தலைநாளில் ஒரு ஆம்பளப்பிள்ளை பிறக்கட்டும்’ என்ற வாழ்த்துக்களுடன் கூடிய தன் எண்ணத்தை அந்த வாசகம் வெளிப்படுத்துகிறது’ என்றார்.
அதுசரி, ‘ஏன் பேரன் பிறக்கட்டும்’ என்று வாழ்த்துகிறார்கள், ‘பேத்தி பிறக்கட்டும்’ என்று வாழ்த்தவில்லை? என்று அந்தப் பெரியவரிடம் மேலும் கேட்டேன்.
பெரியவர், “தலைப்பிள்ளை ஆம்பளப்பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என்று பொதுவா நாம நினைக்கிற நினைப்பைத்தான் அந்த வாசகம் பிரதிபலிக்கிறது”ன்னு சொன்னார். “அந்த வாசகத்திலும், ஒருவித ஆணாதிக்க மனோபாவம் இருக்கத்தான் செய்கிறது” என்று நினைத்துக் கொண்டேன்.
கிராமத்து மக்கள் எதேச்சையாகப் பேசுகிற பேச்சு மரபில்கூட நுட்பமான சில சேதிகள் இருக்கின்றன. அதேபோல கிராமத்து மக்களில் சில இனக்குழு மக்களுக்கு என்று சில அபூர்வமான நடை, உடை, பாவனைகள் இருக்கின்றன.
புகைப்படக் கருவி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இன்று கிடைத்தால், அப்புகைப்படத்தை வைத்து ஆய்வுகள் செய்து பலப்பல செய்திகளை நாம் அறிந்துகொள்ள முடியும்.
நடுத்தர வயதுடைய ஒரு குடும்பப் பெண்ணின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் என் பார்வைக்கு வந்தது. அந்தப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு பெரியவர் ஒருவர், “இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர்தான்” என்று அடித்துக் கூறினார் (உறுதியாகச் சொன்னார்).
“எப்படி அந்தப்பெண் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர்தான் என்று அடித்துக் கூறுகின்றீர்கள்?” என்று பெரியவரிடம் கேட்டேன்.
பெரியவர், ‘புகைப்படத்தில் இருக்கும் பெண் சேலை கட்டி இருக்கும் விதம், அவள் காதில் அணிந்திருக்கும் ‘பாம்படம்’ என்ற நகை, அவள் கால்களில் கிடக்கும் தண்டை, கழுத்தில் கிடக்கும் தாலியின் அமைப்பு எல்லாவற்றையும் பார்த்துக் கணித்துத்தான் கூறுகிறேன்’ என்றார்.
‘எனக்கொன்றும் புரியவில்லையே என்றேன்’ நான். “பழங்கால புகைப்படங்கள் கூட இன்றைய நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுக்கு ஒரு சான்றாதாரம்தான். புகைப்படத்தில் இருக்கும் பெண் மேலுக்கு சட்டை போடவில்லை. நடுத்தரமான வயதில் மாராப்புச் சேலையுடன் ஒரு புகைப்படத்திற்கு ஒரு பெண் போஸ் கொடுத்திருக்கிறாள் என்றால், அவள் இன்ன ஜாதியைச் சேர்ந்த பெண் அல்ல என்று பட்டியலிட்டு விடலாம். அடுத்து அப்பெண் காதில் போட்டிருக்கும் பாம்படம்.
இந்தப் புகைப்படம் எடுத்து சுமார் இருநூறு வருசமாவது இருக்கவேண்டும். அன்றைய காலகட்டத்தில் ‘பாம்படம்’ என்ற இந்த ஆபரணத்தை இன்ன இன்ன ஜாதிக்காரர்கள் அணிந்தார்கள்’ என்று பட்டியலிட்டு விடலாம்.
எல்லாவற்றையும் விட அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருக்கும் தாலியைப் பார்க்க வேண்டும். ஒரு பெண் கழுத்தில் அணிந்திருக்கும் தாலியை வைத்து அந்தப் பெண் எந்த மதத்தைச் சேர்ந்தவள், என்ன ஜாதியைச் சேர்ந்தவள், அந்த ஜாதியிலும் எந்தப் பிரிவைச் சேர்ந்தவள் என்று துல்லியமாகக் கூறிவிடலாம்.
ஒவ்வொரு ஜாதிக்கென்று ஒவ்வொரு விதமான ‘தாலி’ இருக்கிறது. அதில் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் என்று ஒவ்வொருவிதமான தாலி அடையாளம் இருக்கிறது. தமிழ்ப் பெண்களின் தாலியைப் பற்றிப் பேசினால் அதுவே பெரியதொரு ஆராய்ச்சியாகப் போய்விடும்’ என்று விளக்கம் கூறினார்.
‘புகைப்படத்தில் இருக்கும் அந்தப்பெண் ஏன் மேலுக்குச் சட்டை அணிந்து கொள்ளவில்லை?’ என்று பெரியவரிடம் கேட்டேன்.
பெரியவர் “இன்றைக்கும் கிராமங்களில் மாராப்போடு வீட்டிற்குள்ளும், வீதியிலும் வலம் வரும் பெண்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் தான் உடம்பில் அணிந்திருக்கும் சட்டையைக் கழற்றிவிடுவார்கள். அதன் பிறகு மாராப்புச் சேலையுடன்தான் காட்சியளிப்பார்கள்.
சின்னப் பிள்ளைகளுக்குப் பாவாடை சட்டை போட்டு அழகு பார்க்கிறார்கள். அதே பெண் குழந்தையின் உடம்பில் பருவ மாற்றங்கள் வந்த பிறகு அக்குமரிப் பெண்ணுக்குப் பாவாடை சட்டையுடன் தாவணியும், சில உள்ளாடைகளும் அணிந்துகொள்ளச் சொல்கிறார்கள்.
அதே பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்போது சேலை, சட்டை அணிந்துகொள் என்கிறார்கள். சில குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்கள் – ஒரு காலகட்டத்தில் தன் உள்ளாடையையும் சட்டையையும் கழற்றி எறிந்துவிடுகிறார்கள்.
அப்படித் தன் சட்டையைத் துறக்கும் அந்தப் பெண்ணுக்குக் கணவர் இருப்பார். தலைக்கு மேல் வளர்ந்த ஆம்பளப் பிள்ளைகள், பொம்பளைப் பிள்ளைகள் இருப்பார்கள். ஆனால், அவர்கள் யாரும் அப்பெண் தன் சட்டையைத் துறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார்கள். ஏனென்றால், அது அவர்களின் கலாச்சாரம் சார்ந்த விசயம் என்று விளக்கம் சொன்னார்.
நான் பெரியவரிடம், “எப்போதிருந்து அந்தப் பெண் தன் சட்டையைத் துறக்கிறார்?” என்று கேட்டேன்.
நண்பர், “குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த பெண் தன் தலைமகனின் மகள் (பேத்தி) வயசுக்கு வந்த நாளில் இருந்துதான் அணிந்திருக்கும் சட்டையைக் கழற்றி விடுகிறாள். பேத்தி வயதிற்கு வந்துவிட்டாள் என்றால், அவளின் கர்ப்பப்பை ஒரு கருவைத் தாங்கும் தகுதியை அடைந்துவிட்டது’ என்பது பொருள். எனவே பாட்டியான அந்தப் பெண் தன் சட்டையைக் கழற்றி ஊர் உலகத்திற்குத் தன் மூத்த மகன் வயிற்றில் பிறந்த பிள்ளை வயசுக்கு வந்துவிட்டாள் என்பதைக் குறிப்பாக அறிவிக்கிறாள்.

சட்டையைத் துறப்பது என்ற குறியீடு, ‘காமத்தைக் கடத்தல்’ என்பதையும் குறிக்கிறது. கணவன், மனைவி என்று தாத்தாவும், பாட்டியுமாக அவர்கள் வாழ்ந்தாலும், மனைவி தன் சட்டையைத் துறந்த பிறகு அப்பெண், தன் கணவருடன் தாம்பத்திய உறவை வைத்துக்கொள்வதில்லை. ‘சட்டை துறப்பு’ என்ற செயல், இதுவரை கணவன் – மனைவியாகச் சேர்ந்து வாழ்ந்து அவர்கள் பெற்ற இல்லற சுகத்திற்கு அதாவது காமத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது. இதற்கு அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ, ஊர்க்காரர்களோ எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. இதுபோன்ற பண்பாட்டுக் கூறுகள் காலங்காலமாகக் கிராமப்புறங்களில் சில இனக்குழு மக்களிடம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
நடுத்தர வயதாக இருந்தாலும், உடல் கட்டுடன் அத்தகைய பெண் இருந்தாலும், அவர்கள் குறிப்பிட்ட அந்த நாளிலிருந்து தானே முன்வந்து தன் சட்டையைத் துறந்துவிடுகிறாள். அல்லது சமூகம் சார்ந்த கலாச்சார அம்சம் அப்பெண்ணைச் சட்டையைத் துறக்கும்படி நிர்ப்பந்திக்கிறது.
இப்படிச் சில கிராமத்து மக்கள், ‘காமத்தைத் துறப்பது’ என்பதையும் ஒரு சடங்காக, வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலோட்டமாக இத்தகைய சேதிகளைப் பார்க்காமல் கூர்ந்து கவனித்து ஆராய்ந்தால் நம் பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த பல உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியும்” என்றார் பெரியவர்.

நன்றி : திரு.கழனியூரன் 

கிராமத்து மக்கள்


கிராமத்து மக்கள் எதையும் மங்களமாகச் சொல்லவேண்டும் என்றே நினைக்கிறார்கள். சொற்களில் சில சுடும். ‘அறம்’ பாடி அழித்த புலவர்களை நாம் அறிவோம். அமங்கலமான ஒரு நிகழ்வைக் குறித்துச் சொல்லும்போதுகூட கிராமத்து மக்கள் அதை மங்களமான சொற்களில்தான் கூறுகிறார்கள்.
ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டார். இப்போது அந்தப் பெண்ணின் கழுத்தில் கிடக்கும் தாலியை அறுக்க வேண்டும். அல்லது நீக்க வேண்டும். கணவனை இழந்த பெண்ணின் கழுத்தில் கிடக்கும் தாலியை அகற்றியாகிவிட்டதாஎன்பதை ஒரு மூதாட்டி‘தாலியைப் பெருக்கியாச்சாஎன்று கேட்டார்.
‘தாலியை அப்ற்றியாச்சா?’ என்று அமங்கலமாகக் கேட்காமல்‘தாலியைப் பெருக்கியாச்சா?’என்று மங்களமாக அந்த மூதாட்டி கேட்ட மொழி நுட்பத்தைக் கண்டு நான் வியந்தேன். கிராமத்து சம்சாரிகளின் இத்தகைய சில அமங்கலம் நீக்கிய மங்களகரமான பிரயோகங்களை இக்கட்டுரையில் பதிவு செய்யலாம் என்று கருதுகிறேன்.
இனி வீரசேரளம்பதூர் இரா.உ. விநாயம் பிள்ளை என்ற கதை சொல்லி கூறியதைக் கேளுங்கள்.
அது ஐப்பசி மாதம், கழனியில் நடவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சேர்ந்தாற்போல ஒரு கோட்டை விதப்பாடு, கரையடியோரம், தொழி உழவு உழுது மரம் அடிச்சி, நாற்றுப் பிடுங்கி, நாற்றங்காலில் இருந்து, நாற்றைச் சுமந்து நாற்று முடிகளை விதைத்து இருந்தார்கள் நடுகைத் தொழியில் (வயலில்).
அன்று நான் நடுகை. நான்தான் ஈசான மூலையில் மூன்று இடத்தில் நாற்றுகளை நட்டு நடுகையை ஆரம்பித்து வைத்தேன். நான் நட ஆரம்பித்ததும், அருகில் நின்ற ஒரு பெரிய மனுஷி, என் வெள்ளை வேட்டி சட்டை மீது, சகதியில் தெளிந்த தண்ணீரை எடுத்து என்மீது தெளிக்க, மற்றப் பெண்கள் எல்லாம் ஒருசேர குலவைச் சத்தம் எழுப்பினார்கள்.
எப்போதும் அப்பாதான் ‘நாள் நடுகை’யை ஆரம்பித்து வைப்பது வழக்கம். இன்று அப்பா வராததால் நான் நாள் நடுகையை ஆரம்பித்து வைத்தது எனக்குப் புது அனுபவமாக இருந்தது. சேற்றுத் தண்ணீர் என் வெள்ளை வேட்டி சட்டையை அழுக்காக்கினாலும், அந்த நிகழ்வு எனக்குச் சந்தோசமாக இருந்தது.
ஒருபுறம் நடுகை நடந்து கொண்டிருந்தது. மறுபுறம் நாற்றங்காலிலும் உழவு நடந்து கொண்டிருந்தது. நாற்றங்காலை உழும் உழவனைப் பார்த்து நடவு செய்து கொண்டிருந்த ஒரு பெரிய மனுஷி சொன்னாள். ‘அது புள்ளைப் பெத்த வயல்’ அதை நன்றாக உழு என்று. ‘புள்ளை பெத்த வயல்’ என்ற சொற்பிரயோகம் எனக்குப் புதிதாக இருந்தது. ஏன் இந்த வயலை மட்டும் அப்படிச் சொல்கிறார்கள் என்று உழவனிடம் கேட்டேன்.
தம்பி, “அது நாற்றங்கால். அந்த நாற்றங்கால் ‘நாற்று’ என்ற பிள்ளையை இப்போதுதான் பெற்றிருக்கிறது. நாற்றங்கால் கெட்டிப்பட்டுப் போய் இருக்கும். எனவே நாற்றங்காலை நன்றாக உழவேண்டும் என்பதைத்தான் ‘புள்ளைப் பெத்த வயலை நன்றாக உழு’ என்று அந்தப் பெண் கூறுகிறாள். நெல் விதையை கருவாகவும், நாற்றை வயிற்றில் வளரும் பிள்ளையாகவும், பெண்கள் பாவிப்பதால் நாற்றங்காலைப் பிள்ளைப் பெத்த வயல் என்று கூறுகின்றார்கள் என்று விளக்கம் கூறினார். உழவர் கூறிய விளக்கம் எனக்குப் பிரமிப்பை ஏற்படுத்தியது.
நாற்றங்காலில் இரண்டு ஏர்கள் உழுது கொண்டிருந்தது. முன்னால் போன உழவு மாடுகள் ரொம்ப சூட்டிகையாக (சுறுசுறுப்பாக) இருந்தன. வேகமாக நடந்தன. பின்னால் சென்ற மாடுகள் மெதுவாக நடந்தன. “முன்னேர் போன வழியே பின் ஏர் போகும்’ என்பது பழமொழி. பின்னேர்க்காரன் அடிக்கடி, முன்னேர்க்காரனைப் பார்த்து ‘கண்டோட்டு’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். பின்னேர்க்காரன் சொல்வதின் பொருள் எனக்குத் தெரியவில்லை. எனவே, எங்கள் உழவனிடம் ஏன் பின்னேர்க்காரன் அடிக்கடி ‘கண்டோட்டு’ என்று கூறுகிறான்? என்று கேட்டேன்.
உழவன், முன்னேர்க்காரன் வேகமாகச் செல்கிறான். எனவே அவனை, ‘நின்று போ, அல்லது மெதுவாகப் போ….’ என்று கூறவேண்டும். ‘ஏரை நிறுத்து’ என்பது அமங்கலச் சொல். ஏர் என்பது உழவைக் குறிக்கும். ‘ஏரை நிறுத்து என்றால், விவசாயம் செய்வதையே நிறுத்து’ என்று பொருள்பட்டுவிடும். எனவேதான் ‘கண்டோட்டு’ என்று வேறு ஒரு சொல்லைச் சொல்கிறான். பின்னேர்க்காரன் ‘ஏரை எடுத்து வச்சிட்டான்’ என்றால், சம்சாரித்தனம் செய்வதையே நிறுத்திவிட்டான் என்று அர்த்தம். ஏர்தான் உழவனின் சின்னம். எனவே ஏர் சம்பந்தப்பட்ட விசயங்களில் அமங்கலச் சொல் வராமல்தான் சம்சாரிகள் பேசுவார்கள்.
ஏர்க்கால், ஒடிந்துவிட்டது என்றால், ‘ஏர்க்கால் வளைந்து விட்டது’ என்றுதான் கூறுவார்கள். ஏர்க்கால் ஒடிந்துவிட்டது என்று அமங்கலமாகக் கூறாமல், ‘ஏர்க்கால் வளைந்துவிட்டது’ என்று மங்களமாக, குறிப்பாகக் கூறுவார்கள் என்று உழவன் மேலும் விளக்கம் கூறினான்.
நடுகை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது சுமார் மத்தியானம் பன்னிரண்டு மணி இருக்கும். உழவன், வரப்பின்மேல் நின்றுகொண்டு இருந்தான். உழவன் பெண்டாட்டி உழவன் அருகில் சென்று அவன் காதோரமாய் ஏதோ ‘குசுகுசு’ என்று கூறினாள். உடனே உழவன் வயலில், நாற்று எடுத்துப் போட்டுக் கொண்டிருந்த பையன், உழவுக்காரர்கள், மற்றும் என்னையும் பார்த்து ஆம்பளைகள் எல்லாம் கரை ஏறி அந்தப் பக்கமா போங்க. பெண்கள் ‘கழனி பார்க்கணுமாம்’ என்று கூறிக்கொண்டே உழவன் குளத்தின் கரையைப் பார்க்க நடக்கத் தொடங்கினான். ஆண்கள் அனைவரும், அவரவர் வேலையை அப்படி, அப்படியே போட்டுவிட்டு உழவன் பின் சென்றார்கள். நானும் உழவன் பின்னால் சென்றேன்.
எல்லோரும் குளத்தின் கரையைக் கடந்து கீழே இறங்கி, ஒரு கருவை மரத்தில் நிழலில் அமர்ந்தோம். அப்போது நான் உழவனைப் பார்த்து, “கழனி பார்க்கணும்னா என்ன அர்த்தம்? பெண்கள் கழனி பார்க்க, நாம் ஏன் இங்கு வரவேண்டும்?’’ என்று கேட்டேன்.
உழவன் என்னைப் பார்த்து ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்துவிட்டு, “பெண்கள் நடுகை நட ஆரம்பித்ததில் இருந்து எங்கும் போகாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஆம்பிளைகளாகச் சுற்றி நின்று கொண்டிருக்கும்போது எப்படி அவர்கள் ‘ஒதுங்க’ முடியும்? அதனால், நடுகையின்போது நடுவேளையில், ‘கழனி பார்க்கணும்’ என்று பெண்கள் கூறினால், நாம்தான் அதைப் புரிந்துகொண்டு ஒதுங்கிக் கொள்ளணும். சில விசயங்களை நேரடியாகக் கூற முடியாது. இப்படித்தான் ஜாடைமாடையாக சொல்லுவார்கள். நாம்தான் அதை அனுபவத்தில் புரிந்து கொள்ளணும்” என்று விளக்கம் கூறினான்.
சம்சாரிகள் மத்தியில் நிலவும் இத்தகைய குழுவுக் குறிகள் கேட்க சுவாரசியமாக இருந்தன என்று கூறினார் தகவலாளர்.

நன்றி : திரு.கழனியூரன் 

பாணான் மரபு


பழங்காலத்தில் ஜாதியப் பிரிவுகள், அவரவர்கள் குழுவாகச் செய்யும் தொழிலின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. தச்சு வேலை, கொல்லு வேலை, தங்க வேலை, கல்வேலை – என்று தனித்தனித் தொழிலை மட்டும் செய்கிறவர்களை, ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள்ளேயே தனித்தனி பிரிவுகளாக வகுத்திருந்தார்கள்.
சலவைத்தொழில் செய்கிறவர்களிலும், அந்தக் காலத்தில் ரெண்டு மூன்று வகையினர் இருந்தனர். உயர் ஜாதிக்காரர்களுக்குச் சலவை செய்து கொடுக்க என்று ஒரு பிரிவினரும் தாழ்ந்த ஜாதிக்காரர்களுக்கு சலவை செய்து கொடுக்க என்று ஒரு பிரிவினரும் இருந்தார்கள்.
இன்றைக்கு நவீன இயந்திரங்களின் பயன்பாடு வந்த்தால் குறிப்பிட்ட சில வேலைகளைக் குறிப்பிட்ட சில ஜாதிக்காரர்கள்தான் பார்க்க வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது. சான்றாக மரம் அறுக்க இயந்திரங்களும், மரத்தடிகளை இழைக்க இயந்திரங்களும் இன்று பயன்பாட்டிற்கு வந்துவிட்டதால், எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களிலும் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் தச்சுத் தொழிலைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
மரக் கட்டில்களையும், மேஜை, நாற்காலி போன்ற மரச் சாமான்களையும் விதவிதமாகத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பலவும் நாட்டில் பெருகிவிட்டன. அத்தொழிற்சாலைகளில் தச்சுத்தொழில் செய்யும் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் பணி செய்வதில்லை. சகல ஜாதியைச் சேர்ந்தவர்களும், அத்தொழிற்சாலையில் பணி செய்கிறார்கள்.
இதே போல, இரும்பு சம்பந்தப்பட்ட வேலைகளும், இன்று இயந்திரமயமாகி விட்டன. செருப்புத் தைப்பது, சலவை செய்வது, சிகை அலங்காரம் செய்வது என்பது போன்ற பல தொழில்கள், இன்று ‘ஜாதி’ என்ற எல்லையைத் தாண்டிப் பொதுமைப்பட்டு விட்டன.
‘தையல் வேலை’. தையல்கலை சம்பந்தப்பட்ட வேலைகளையும் பழங்காலத்தில் குறிப்பிட்ட ஒரு ஜாதியைச் சேர்ந்த மக்கள் மட்டுமே செய்தார்கள். கையால் தையற் வேலை செய்து வாழ்ந்த அந்த மக்கள் ‘பாணான்’ என்ற குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். பாணான் என்பதின் பெண்பால் பெயர் பாணாத்தி என்பதாகும்.
இசை பாடி மக்களை மகிழ்வித்தவர்கள் ‘பாணன்’ என்று அழைக்கப்பட்டார்கள். தையல் கலையை மட்டும் செய்து வாழ்ந்த மக்களை ‘பாணான்’ என்று அழைத்தார்கள். ‘பாணன்’ என்பதையும் ‘பாணான்’ என்பதையும் பிரித்தறிந்து பொருள் புரிந்து கொள்ள வேண்டும்.
தையல் இயந்திரம் கண்டு பிடிக்கப்படும் முன்பு நம் நாட்டில் வாழ்ந்த மக்கள், கையால் தைக்கப்பட்ட ஆடைகளையே அணிந்திருக்கிறார்கள். தையல் வேலை செய்கிறவர்களிலேயே பல பிரிவினர் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள்.
கிழிந்த பழைய துணியை தைத்துக் கொடுத்து மட்டும் (இன்றைக்கு கிழிந்தா பழஞ்சாக்கைத் தைத்துக் கொடுப்பதைப்போல) தொழிலாகக் கொண்டு சில பாணான்களும், பாணாத்திகளும் வாழ்ந்திருக்கிறார்கள். பழைய கிழிந்த வேட்டிகளையும், பழைய கிழிந்த சேலைகளையும், சட்டைகளையும் மட்டும் கையில் ஊசி நூல் கொண்டு தைத்துக் கொடுத்து, அதற்குக் கூலியாகத் தானிய தவசங்களையும், சாப்பிட கஞ்சியும் வாங்கி இருக்கிறார்கள்.
கிழிந்த பழந்துணிகளைப் பொதுமக்களுக்குத் தைத்துக் கொடுத்து அதிலிருந்து வரும் எளிய வருவாயைக் கொண்டு தன் கால ஜீவனத்தைக் கழித்த பாணானும், பாணாத்தியும் அன்றையச் சமூக அமைப்பில் விளிம்புநிலை மக்களாகவே இருந்திருக்கிறார்கள்.
இன்னும் பேச்சுவழக்கில் ஒருவனை அல்லது ஒருத்தியைத் திட்டும்போது ‘போடா… பாணாத்தி…’ என்று சொல்லி வைகிறார்கள். (ஏசுகிறார்கள்) இந்த வசவில் பாணாத்தி என்ற சொல் இழிநிலையிலேயே கையாளப்படுகிறது.
பாணான்களிலும் அந்தக் காலத்தில் ரெண்டு மூணு வகையினர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் மிகவும் கடைநிலையில் உள்ளவர்கள்தான் கிழிந்த பழந்துணியைத் தைத்திருக்கிறார்கள். பாணான்களிலேயே நடுநிலையான அந்தஸ்தில் உள்ளவர்கள் புதிய துணிகளை அளவெடுத்து வெட்டிக் கையில் ஆடைகளாகத் தைத்து மக்களுக்குக் கொடுக்கும் ‘தையல்காரர்’களாக இருந்திருக்கிறார்கள். இத்தகைய தையல்காரர்களுக்கு கூலியும் அதிகமாகக் கிடைத்திருக்கிறது. பாணான்களிலேயே தலைநிலையில் உள்ள தையல்காரர்கள் தையல் கலைஞர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். இவர்கள், அரசர்கள், ஜமீன்தார்கள், பெருந்தனக்காரர்கள்  போன்ற மேட்டுக்குடி மக்களுக்கும், தேரை அலங்கரிக்கவும், பவனி வரும் சாமியின் அலங்காரத்திற்கும், சாமியாடும் கோமரத்தான்களுக்கும் மட்டும் கலை அழகுடன் கூடிய ஆடை அணிகலன்களைத் தைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
தையல் கலை மூலம் கலையழகுடன் கூடிய ஆடைகளைத் தைத்துக் கொடுக்கும், பாணான் என்ற கலைஞர்களை அந்தக் காலத்தில் ஜமீன்தார்களும், குறுநில மன்னர்களும் ஆதரித்திருக்கின்றார்கள். சாமி அலங்காரத்திற்கும், சப்பர அலங்காரத்திற்கும், தேரின் அலங்காரத்திற்கும், கலையழகுள்ள, தையல் வேலைகளைச் செய்து கொடுக்க என்று சில பாணான்களை அரசர்கள் நியமித்து, அவர்களுக்குக் கூலிக்குப் பதில் சில மானியங்களை (முப்போகம் நெல் விளையும் நிலங்களை) வழங்கி இருக்கிறார்கள்.
திருநெல்வேலி டவுனில், கூழைக்கடை பஜாருக்கு அருகில் உள்ள ஒரு சந்திற்கு பாணான் முட்டுச்சந்து என்று பெயர் உள்ளது. நெல்லையப்பர் கோயில் சம்பந்தப்பட்ட தையல்கலை வேலைகளைச் செய்யும் சில தையல் கலைஞர்களின் குடும்பங்கள் மட்டும் அந்தக் காலத்தில் அந்தச் சந்தில் வாழ்ந்திருக்கிறார்கள். எனவே தான அந்தச் சந்திற்கு பாணான் முட்டுச்சந்து என்று பெயர் வந்தது என்று பெரியவர் ஒருவர் என்னிடம் நேர் பேச்சில் கூறினார்.
இன்றும் ‘பாணான்’ இனத்தைச் சேர்ந்த சில குடும்பத்தினர் திருநெல்வேலி டவுனில் வசிக்கிறார்கள். அவர்களில் சிலர், இன்றும் திருவிழாக் காலங்களில் நெல்லையப்பர் கோயில் தேரின் அலங்கார வேலைகளையும், சப்பர அலங்கார வேலைகளையும் பார்க்கிறார்கள்.
தாமிரபரணி ஆற்றின் கரையில் குறுக்குத் துறைக்குப் பக்கத்தில் உள்ள சில வயல்களை ‘பாணான் மானியப் பத்து (கழனி) என்று அழைக்கிறார்கள். வயல்களுக்கு இன்று ‘பாணான் மானியம்’ என்ற பெயர் இருக்கிறதே தவிர, தற்போது அந்த நிலங்கள் சம்சாரிகள் சிலருக்கு உரிமையானதாக உள்ளது. பாணான் வம்சத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அந்த மானிய நிலங்களை வறுமையின் காரணமாகப் பிறருக்கு விற்றிருக்க வேண்டும்.
எங்கள் வட்டாரத்தில், ஊத்துமலை ஜமீனின் தலைநகரமான வீரகேரளம் புதூரில், சில ‘பாணான்’ இனத்தைச் சேர்ந்த தையல் கலைஞர்கள் வாழ்கின்றனர். தையல் கலை என்பதும் இயந்திர மயமாகிவிட்டதால், இவ்வூரில் உள்ள பாணான் இனத்து ஆடவர்கள், தையல் கடை வைத்து, தையல் வேலை செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களில் ஒரே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பாடாலிமுத்து என்பவர் மட்டும் பாரம்பரியமான தன் தையல் கலையை இன்றும் விடாமல் செய்து கொண்டிருக்கிறார். எங்கள் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஜாதியைச் சேர்ந்த அனைத்துக் கோமரத்தான்களுக்கும் (சாமியாடிகளுக்கும்) தேவையான தலைக் குல்லாய்களையும், ‘சல்லையம்’ என்று சொல்கிற இடுப்பில் – அணியும் நீண்ட டவுசர் (சாட்ஸ்) போன்ற உடுப்பையும் தைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாமியாடிகள், தலையில் அணிந்துகொண்டு ஆடும் குல்லாய் (தொப்பி) பல வண்ணத்துணிகளால் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டதாக இருக்கும். சாமிகள் அணியும் குல்லாய் பெரும்பாலும் விதவிதமான, கைத் தையல்களால், வண்ணமயமாக உருவாக்கப்படுகிறது, இந்தக் குல்லாய்களின் இடை இடையே மின்னும் கண்ணாடித் துண்டுகளும் கைத் தையலால் பதிக்கப்பட்டிருக்கம்.
அதேபோல சாமியாடிகள் இடுப்பில் அணியும் ‘சல்லையம்’ என்ற உடையும், பல வண்ணத் துணிகளால், அழகிய கலைநயம் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடியதாகத திகழ்கிறது. காலங்காலமாக, சாமியாடிகளுக்கு, தலைக் குல்லாய்களையும், சல்லையங்களையும், பாணான் இனத்தைச் சேர்ந்த இந்த பாடாலிமுத்துவின் முன்னோர்தான் தைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாணான் மரபில் வந்த பாடாலிமுத்து இன்றும் தன் குலத்தொழிலை கலைநயத்துடன் செய்து வருகிறார்.
இவர், இத் தையல் கலையை குருகுலமாகத் தன் தந்தையாரிடம் இருந்து கற்றுக்  கொண்டதாகக் கூறுகின்றார். வீரகேரளம்புதூரில்  சாமியாடிகளுக்குத் தேவையான அழகிய வேலைப்பாடுகள் மிகுந்த உடுப்புகளையும், குல்லாய்களையும் தைத்து தன் தையல் கடையில் வரிசையாகத் தொங்கப் போட்டிருக்கின்றார். பொதுமக்களில் சிலர் நேர்த்திக் கடனாக இந்த உடுப்புகளை வாங்கி சாமிகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள் என்கிறார்.
சாமியாடிகளுக்குத் தேவையான உடுப்புகளுடன் சாமியாடிகள் கையில் பிடித்து ஆடும் வல்லயக் கம்புகளையும், சாமியாடிகள் கையில் வைத்து அடிக்கும் சாட்டைகளையும் சேர்த்துத் தன் தையல் கடையில் வைத்து விற்று வருகிறார். தையல் கலைஞரான பாடாலி முத்து.
ஆய்வாளர்களின் அதிகக் கவனத்தைப் பெறாத, பாணான் கலைஞர்களைப் பற்றி நாட்டுப்புறவியல் துறைசார்ந்த ஆய்வாளர் யாராவது முயன்று தேடினால் மேலும் அதிகமான தரவுகளை நாம் பெறலாம்.

நன்றி : திரு.கழனியூரன்

சேர்வைக்காரன்


திருநெல்வேலி மாவட்டத்திலும் ஒரு வீராணம் இருக்கிறது. ‘வீராணத்தில் உங்கள் வீடு எந்தப் பகுதியில் இருக்கிறது?’ என்று ஒரு பெரியவரைக் கேட்டேன். பெரியவர், ‘எங்கள் வீடு ‘சேரு‘க்குப் பக்கத்தில் இருக்கிறது’ என்று கூறினார்.
‘சேர்’ என்ற ஆங்கில வார்த்தைதான் எனக்குத் தெரியும். ‘சேரு’ என்ற தமிழ் வார்த்தையை அல்லது வட்டார வழக்குச் சொல்லை நான் கேள்விப்பட்டதில்லை. எனவே பெரியவரிடம் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ‘சேரை’ எனக்குக் காட்டுங்கள் எனறேன்.
பெரியவரும் ‘சேர்’ இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அது பெரிய பெரிய ரூம்களாக ‘ப’ என்ற எழுத்து வடிவில் இருந்தது. ‘இந்தக் கட்டிடங்களை ஏன் ‘சேர்’ என்று கூறுகின்றார்கள்?’ என்று பெரியவரிடம் கேட்டேன்.
தம்பி, இநதக் கட்டிடங்கள் எல்லாம் ஊத்துமலை ஜமீனுக்குச் சொந்தமானது. ஜமீன்தார் அந்தக் காலத்தில் அவர்களுக்குச் சொந்தமான நிலங்களை அந்தந்தப் பகுதி சம்சாரிகளுக்குப் பயிரிட பிரித்துக் கொடுத்து விடுவார். நெல் விளைந்தால் மட்டும் நெல் அறுவடையானதும், ஜமீன் நிலங்களைப் பயிரிட்ட சம்சாரிகளிடம் இருந்து கட்டுக் குத்தகை (பாட்டம்) நெல்லை வாங்குவார்கள்.
அப்படி வாங்கிய நெல்லை, உடனே ஜமீன் தலைநகருக்குக் கொண்டு செல்லமாட்டார்கள். அந்தந்த ஊர்களில் ஜமீன் கட்டி வைத்திருக்கும் இதுபோன்ற ‘சேர்’களில்தான் நெல்லை இருப்பு வைப்பார்கள்.
நெல்லை இப்படிச் சேர்த்து வைக்கும் இடத்தை ‘சேர்’ என்று கூறுகின்றார்கள். நெல்லை கட்டுக் குத்தகைக்காரர்களிடமும், நிலவரிக்காரர்களிடமும் வசூல் செய்வதற்கும் ஊர்தோரும் ஜமீன்தாரர் ஒரு அதிகாரியை நியமித்திருந்தார். அவருக்குச் சேர்வைக்காரன் என்று பெயர்.
அந்தக் காலத்தில் நிலங்களுக்கு ஜமீன்தார்கள் நிலவாரியாக, தானிய தவசங்களை வசூல் செய்தார்கள். நெல் விளையும் இடத்தில் நெல்லையும், சோளம் விளையும் இடத்தில் சோளத்தையும் வரியாக வசூல் செய்வார்கள். நெல், சோளம் தவிர மற்ற தானியங்களையும் வரியாக வசூல் செய்தார்கள். எந்தெந்தக் காலத்தில் என்னென்ன தானியம் விளைகிறதோ, அந்தந்தக் காலத்தில், அந்தந்த தானியத்தை வரியாக வசூல் செய்தார்கள்.
இந்தச் சேரில் அந்தக் காலத்தில் ஒவ்வொரு அறையிலும், ஒவ்வொரு தானியத்தைச் சேமித்து வைப்பார்கள். இப்படித் தானியங்களைச் சேர்த்து வைப்பதால், அந்த இடத்தைச் ‘சேர்’ என்று அழைத்தார்கள். ‘சேர்’ நிறைய தானியத்தைச் சேமிக்கும் அதிகாரியைச் சேர்வை அல்லது சேர்வைக்காரன் என்று சொன்னார்கள், என ‘சேர்’ என்ற வார்த்தை வந்த விபரத்தை விளக்கினார் பெரியவர்.
“சிறிய தானியக் களஞ்சியத்தைத்தான் வழக்கு மொழியில் ‘சேர்’ என்று கூறுகின்றார்கள் என்பதைப் புரிந்துகொண்டு மேலும், விபரங்களைச் சேகரிக்க நான் பெரியவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
“இந்தச் சேருக்கு அந்தக் காலத்தில் காவலர்கள் இருந்தார்களா?” என்று கேட்டேன். பெரியவர், “அம்புட்டுத் தானியத்தை அடைத்து வைத்துவிட்டுக் காவலுக்கு ஆள் வைக்காமல் இருப்பார்களா?”
ராவும் (இரவும்) பகலும், மாற்றி மாற்றி இந்தச் சேரை அரண்மனைக் காவலர்கள் காவல் காத்தார்கள். ஜமீனுக்குச் சொந்தமான சேர் என்பதால் இந்தப் பக்கம் வரவே எல்லோரும் பயப்படுவார்கள். ஆனால் யுத்த காலம் வந்துவிட்டால் எதிரி நாட்டு வீரர்கள் முதலில், சேரில் உள்ள தானியத்தைத்தான் சூரையாடுவார்கள்.
யுத்த காலத்தில் ‘சேர்’களுக்குக் கூடுதல் பாதுகாப்புப் போடுவார்கள். அதையும் மீறி எதிரி நாட்டுப் படைவீரர்கள் ராவோடு ராவாக வந்து சேர்க்குத் தீ வைத்து விடுவார்கள். தானியக் கிடங்கு தீப்பிடித்து எரிந்தால் என்னவாகும்? தானியங்கள், பொறிபொறியாகப் பொறிந்து பிறகு கருகிவிடும். தானியக் கிடங்குக்குத் தீ வைத்த  எதிரி நாட்டு ராஜாவின் பூமியில் நாலைந்து வருசமாக மழையே பெய்யவில்லை! எந்தப் பத்தினியோ போட்ட சாபம் பலித்துவிட்டது என்று கூறினார்கள்.
சில ஜமீன்கள் சேரில் இருப்பு வைத்த தானியத்தை நாலைந்து வருசத்திற்கு ஏறிட்டுப் பார்க்க மாட்டார்கள். இப்படி அடைத்து வைப்பதால், ஈரத்தோடு இருப்பு வைத்த தானியங்கள் வருசக்  கணக்கில் இருந்ததால் புழுத்து, உளுத்துக் கெட்டுவிடும்.
இருதாலய மருதப்ப பாண்டியன் ஆட்சிக் காலத்தில் மட்டும் முதல் வருசம் இருப்பில் வைத்த தானியத்தை, அந்த வருசம் ஆரம்பத்தில், மழை பெய்து செழித்த உடன் குளம் நிறைந்து, மறுகால் போன உடன் சம்சாரிகள் யாவரும் நெல் நடவு செய்த உடன், அந்த மகசூல் விளைந்துவிடும் என்ற நம்பிக்கை வந்தவுடன், இருப்பில் உள்ள தானிய தவசங்களை எல்லாம் குடி, படைகளுக்குத் தகுதி வாரியாக இனாமாக அளந்து கொடுத்துவிடச் சொல்லிவிடுவார்.
அதனால் மக்களும் மகிழ்ந்தார்கள். தானியங்கள் இருப்பில் வருசக்கணக்கில் இருந்து, உளுத்துப் புளுத்துக் கெட்டுப் போவதும் இல்லை.
ஊத்துமலை ஜமீன்தார் தன் ஆட்சிக்கு உட்பட்ட ஊர்களைப் பல பிர்க்காக் (பகுதி)களாகப் பிரித்து ஒவ்வொரு பிர்க்காவையும் பராமரிக்க ஒரு சேர்வைக்காரரை நியமித்து இருந்தார்.
அந்தந்த பிர்க்காக்களில் நடக்கும் களவு, திருடுகளைக் கண்டிப்பது, திருடர்களைத் தண்டிப்பது, களவு, திருடு நடக்காமல் காபந்து பண்ணுவது, வரிவசூல் பண்ணுவது, ‘சேர்’களுக்கு காவல்காரர்களை  நியமிப்பது என்று அனைத்து வேலைகளையும் சேர்வைக்காரர்தான் செய்தார்.
கலங்கல் என்ற பிர்க்காவில் ஒருமுறை சேரில், பின்பக்கச் சுவரை இடித்து ஓட்டை போட்டு யாரோ ஒருவன் நாலைந்து கோட்டை நெல்லைத் திருடிவிட்டான்.
அது நடந்ததும் ஊத்துமலை ஜமீன்தார் மருதப்ப பாண்டியன் காலத்தில்தான். உடனே செய்தி ஜமீன்தார் காதிற்கு எட்டியது. ஜமீன்தார் திருடனை உடனே கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டார். எப்படியோ துப்பு வெட்டி திருடனைக் கண்டு பிடித்துவிட்டார்கள்.
திருடன் யார் என்றால், சேரைக் காவல்காத்த காவல்காரனோட மச்சினன்தான்.
திருடனைப் பிடித்து விசாரித்தால், அவன் ‘காவல்காரனான என் மச்சினன்தான் சேரின் பின்பக்கம் சுவரில் கன்னம் வைத்துத் (ஓட்டை போட்டு) திருடச் சொன்னான்” என்று காவல்காரனைக் கைகாட்டினான்.
“இது என்னடா வேலியே பயிரை மேய்ந்த கதையா இருக்கு” என்று நினைத்த மகாராஜா காவல்காரனைக் கூப்பிட்டு விசாரித்தார்.
காவல்காரன், ‘மகாராஜா! சேர்வைக்காரர் ஒரு வருசமா காவல் கூலி தரவே இல்லை. எனக்கு மட்டுமில்லை. எந்தக் காவல்காரனுக்கும் காவல் கூலி கொடுக்கவில்லை. என் வீட்டில் பல்லில் வைத்துக் கொரிக்கக்கூட ஒரு தானியம் இல்லை! ராவாப் பகலா சேரிலிருக்கும் தானியத்திற்கு காவல் காக்கிற எனக்கே கூலித் தானியத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார் இந்த சேர்வைக்காரர். நானும் என் பிள்ளைகளும் எத்தனை நாளைக்குத்தான் பட்டினி கிடக்க முடியும்? இந்த அநியாயத்தை நான் யாரிடம் போய்ச் சொல்ல முடியும்?  எனக்குக் கூலியாக வரவேண்டிய தானியத்தை, நான் தான் ‘கன்னம்’ வைத்து என் மச்சினனை எடுக்கச் சொன்னேன். நான் செஞ்சது தப்புதான் வயிற்றுப் பசி பொறுக்கமாட்டாமல் திருடச் சொல்லிவிட்டேன். எனக்கு மகாராஜா என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துகிறேன்” என்று பணிவாகக் கூறினான்.
மகாராஜா, மற்றக் காவல்காரர்களையும், சேர்வைக்காரரையும் தனித்தனியே கூப்பிட்டு விசாரித்தார்.
விசாரித்ததில் காவல்காரன் சொன்னது யாவும் உண்மை என்பது ருசுவானது (நிரூபணமானது). எனவே சேரின் சுவரைக் கன்னம் வைத்துத் திருடிய திருடனையும், காவல்காரனையும் விடுதலை செய்துவிட்டு, சேர்வைக்காரனைக் கூப்பிட்டுக் கண்டித்து, அவனைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அந்தப் பிர்க்காவுக்குப் புதிய சேர்வைக்காரனை நியமித்தார் மகாராஜா. ஆனால் காவல்காரனை பதவியிலிருந்து நீக்காமல் விட்டதோடு அவனுக்கு “அரண்மனைக் காவல்” என்ற உயர்ந்த பதவியைக் கொடுத்தார், மகாராஜா இருதாலய மருதப்ப பாண்டியன்.
ஜமீன்களிலேயே மதிநுட்பமும், ஈவு இரக்கமும், பக்தியும், நீதியும் உடையவராக திகழ்ந்தார் இருதாலய மருதப்ப பாண்டியன்” என்று கதையைக் கூறி முடித்தார் பெரியவர்.

நன்றி : கழனியூரன்

Friday, September 3, 2010

அன்னபூரணத்தின் அவலக்கதை-II

பத்து வயதில் கல்யாணம் நடந்ததும், பதினோரு வயதில் விவாகரத்து நடந்ததும் தெரியாமல், அன்ன பூரணம் என்ற சிறுமி, தன் சோட்டுப் பிள்ளைகளுடன் பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்தாள்.

மருதப்பர் விவாகரத்து ஓலை அனுப்பினாலும், அழகப்பத் தேவர் அதை வாங்கிக் கொள்ளவில்லை. "வயசுக்கு வராத பெண் பிள்ளையை விவாகரத்து செய்ய. கட்டிய கணவனுக்கும் உரிமை கிடையாது" என்று வாதிட்டார்.

மருதப்பரின் வகையறாக்காரர்களோ, "விவாகரத்து ஓலையில் கட்டிய கணவர் கையொப்பம் இட்டு விட்டதால் இனி, இந்த ஊரில் உமக்கு வேலை இல்லை, அரண்மனைக்குச் சொந்தமான லெட்சுமி விலாஸ் என்ற வீட்டைக் காலிசெய்துவிட்டு, உம் சொந்த ஊருக்குச் சென்றால் உயிர் பிழைத்தீர், இல்லை என்றால் நடக்கிறதே வேறு!"என்று அழகப்பரை மிரட்டினார்கள்.

ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் மருதப்பரின் ஆட்களிடம் இனியும் மோதினால் நிலமை மோசமாகிவிடும் என்று நினைத்த அழகப்பத் தேவர். இரவோடு இரவாக, அரண்மனைக்குச் சொந்தமான லெட்சுமி விலாஸ் என்ற வீட்டைக் காலி செய்துவிட்டு மகளையும் அழைத்துக் கொண்டு, தன் சொந்த ஊரான குருக்கள் பட்டிக்கே வந்துவிடுகிறார்.

சிறுமியான அன்னபூரணத்திற்கு, திடீரென்று தன் வாழ்வில் எங்கிருந்தோ ஒரு பிரகாசம் வந்தது போலவும், அது இடையில் அணைந்து மீண்டும் இருள் வந்தது போலவும் இருந்தது.

சின்னஞ்சிறு கிராமத்தில் சிறிய ஓட்டு வீட்டில் வறுமையான சூழலில் வாழ்ந்து கொண்டிருந்த அனுபவமும், இடையில், படாடோபமான,அரண்மனை அந்தஸ்துடன் கூடிய வாழ்வனுபவமும், அன்னபூரணம் என்ற சிறுமியைத் திகைக்க வைத்தது.

பட்டுப்பாவாடையும் சட்டையும் உடுத்திக் கொண்டு, பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கியதும், பால் பழங்கள், நாவுக்கு ருசியான உணவு என்று சாப்பிட்டதும் தன்னைச் சுற்றிப் பணிப் பெண்கள் அமர்ந்து கொண்டு, மகாராணியாரே, நாச்சியாரே! என்று அழைத்து. ஏவிய வேலைகளைச் செய்ததும் அச்சிறுமிக்கு வியப்பைக் கொடுத்தது.

"இந்தப் பச்சமதலைக்கு (சின்னஞ்சிறு பெண்ணுக்கு) வந்த வாழ்வைப் பாரேன்!" என்று சுற்றி உள்ள பெண்கள் எல்லாம் மூக்கின் மேல் விரலை வைத்தார்கள்.

சும்மா இருந்த மரக்கிளையில் திடீரென்று தேனீக்கள் வந்து தேன்கூடு கட்டி, அதில் தேனைச் சேமித்தது போல அச்சிறுமியின் வாழ்வில் ஒளி வீசியது.

விதி வசத்தால் அந்த வாழ்வு வெகு நாட்களுக்கு நிலைக்கவில்லை. யார் கண்பட்டதோ, தேன்கூட்டில் உள்ள தேனை எல்லாம் யாரோ ஒருவன் வந்து எடுத்துச் சென்றுவிட்டான்.

சிறுமியின் கழுத்தில் கொடுத்தவாக்கைக் காப்பாற்றுவதற்காகத் தாலிகட்டிய மருதப்பர் அதன் பிறகு ஒரு நாள் ஒரு பொழுதுகூட அச்சிறுமியைப் பார்க்க வரவில்லை.

கல்யாணம் முடிந்த மகிழ்ச்சியும் விவாகரத்து செய்த துக்கமும் அன்னபூரணம் என்ற சிறுமியைப் பாதிக்கவில்லை. ஆனால் அழகப்பத் தேவர் மிகவும் மனம் நொந்து போனார்.

"பனை ஏறியும் பாளை தொடாமல் போனது போல, நம் நிலைமை ஆகிவிட்டதே!" என்று வருந்தினார். "தன் கைக்கு எட்டிய அரண்மனை வாழ்வும் சுக போகமும், ஆட்சி அதிகாரமும், தன் வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே!" என்று வருத்தப்பட்டார்.

அன்னபூரணம் என்ற சிறுமி மீண்டும் தன் சொந்தக் கிராமத்தில் உள்ள தன் சோட்டுப் பிள்ளைகளுடன் (சமவயதுப் பிள்ளைகளுடன்) சேர்ந்து,பாண்டி, நொண்டி, கிளித்தட்டு, கிச்சுக் கிச்சுத் தாம்பளம் என்று பலவிதமான விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்தாள்.

அழகப்பத் தேவரின் உறவினர்கள், "ஜமீன்தார், மேஜராகாத பிள்ளைக்கு ஓலை அனுப்பி விவாகரத்து செய்தது செல்லாது. எனவே நீ வெள்ளைக்கார துரைமார்களிடம் (அதிகாரிகளிடம்) மனுக்கொடுத்து மேல் நடவடிக்கை எடு!" என்று தூண்டினார்கள்.

பணத்தாசை பிடித்த அழகப்பத்தேவர் தன் உறவினர்கள் சொன்னபடி, திருநெல்வேலி சென்று, அப்போது அங்கு கலெக்டராக இருந்த வெள்ளைக்கார துரையிடம் ஜமீன்தார் மருதப்பரின் மேல் புகார் மனு கொடுத்தார்.

ஜமீன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடியிருந்து கொண்டு, ஜமீன்தாருக்கு எதிராக வெள்ளைக்கார துரையிடம் (கலெக்டரிடம்) புகார் மனு கொடுத்ததால், ஜமீன்தாரின் உறவினர்களும், அங்கு பணி செய்யும் அதிகாரிகளும், நேரடியாகவும், மறைமுகமாகவும், அழகப்ப தேவரை மிரட்டினார்கள். எனவே அழகப்பத்தேவர் தன்னைக் காத்துக் கொள்ள தன் உறவினர்களின் துணையை நாடினார்.

ஜமீன்தார் நேசமுடன் இருந்த காலத்தில், தனக்கு அன்பளிப்பாகக் கொடுத்த பொன், பொருள்களையும், நிலபுலன்களையும் அழகப்பத் தேவர் ஒவ்வொன்றாய் விற்றுத் தன் உறவினர்களின் உல்லாச வாழ்வுக்காகச் செலவு செய்தார்.

தன்னைச் சுற்றிச்சூழும் பகையைப் பற்றிக் கவலைப்படாமல் அன்னபூரணி என்ற சிறுமி தன் சோட்டுப்பிள்ளைகளுடன் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

அரண்மனையில் உள்ள ஆட்களால் அன்னபூரணியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அச்சிறுமியை ஜமீன் எல்லை தாண்டிய வேறொரு கிராமத்தில் உள்ள தன் உறவினர் ஒருவரின் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டார் அழகப்பத் தேவர்.

அன்னபூரணம் என்ற சிறுமிக்கு. ஏன் நாம் இப்போது வேறொரு ஊருக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம் என்ற விபரமும் தெரியவில்லை.தாயில்லாப்பிள்ளையான அன்னபூரணம், அவளின் சிற்றன்னையி்ன் வீட்டில் தங்க ஆரம்பித்தாள். அந்தக் காலகட்டத்தில்தான், அன்னபூரணம் வயசுக்கு வந்தாள்.

அன்னபூரணத்தின் பூப்பு நீராட்டு யாருக்கும் தெரியாதபடி மிக ரகசியமாக வைக்கப்பட்டது. பருவம் வந்த தன் பெண்ணைப் பகடைக் காயாக வைத்து ஜமீன் சொத்துகளைப் பெற வேண்டும் என்று அழகப்பத் தேவர் கனவு கண்டார்.

கலெக்டரிடம் அழகப்பத்தேவர் கொடுத்த மனு விசாரணைக்கு வந்தது. அழகப்பத் தேவருக்கு ஆங்கிலம் தெரியாததால் தனக்கு என்று ஒரு வக்கீலை வைத்துக் கொண்டு வாதாடினார். மருதப்பரும் தனக்காக ஒரு வழக்கறிஞரை நியமித்தார்.

வெள்ளைக்கார கலெக்டருக்கு இந்த வழக்கே மிக விசித்திரமாகப்பட்டது. வயசுக்கு வராத சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதும், அதே சிறுமி வயசுக்கு வரும் முன்னரே, அவளை விவாகரத்து செய்ததும் சட்டப்படி குற்றம் என்று வெள்ளைக்கார கலெக்டர் நினைத்தார்.

ஆனால் வழக்கறிஞர்கள், பாலியமனம் என்பதும், சொத்துக்காக, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக, அல்லது தாத்தா, பாட்டி, போன்றோரின் விருப்பத்தை நிறைவேற்ற இது போன்ற திருமணங்களைச் செய்து கொள்வதும் தமிழர்களின் சம்பிரதாயம் என்றும் கலெக்டர் துரைக்கு எடுத்துரைத்தார்கள்.

எதிர் மனுதாரர், ஜமீன்தார் என்பதாலும், அவர், தன் ஆட்சி அதிகாரங்களுக்கு எல்லாவிதத்திலும் ஒத்துப் போகிறவர் என்பதாலும், கலெக்டர் துரை,இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு்க் கொண்டு செல்ல அறிவுறுத்தினார்.

கலெக்டரின் உத்தரவின் பேரில், வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. அழகப்பத் தேவர் தன் சொத்துகளை ஒவ்வொன்றாய் விற்று வழக்கை நடத்தினார். நீதிமன்றம் வாய்தாக்களைப் போட்டுக் காலத்தைக் கடத்தியது.

நாளாக நாளாக, அன்ன பூரணம் கன்னிப் பெண்ணாக வளர்ந்து வந்தாள். இப்போது அவளை யாருக்கும் திருமணம் செய்து கொடுக்க அப்பெண்ணின் தந்தையான அழகப்பத் தேவர் விரும்பவில்லை. அவரைப் பொருத்தவரை அன்னபூரணம் ஊத்துமலை ஜமீனின் இளையராணிதான்.

ஜமீன்தார் மாலையிட்டு, பின் விவாகரத்தும் செய்துவிட்ட பெண்ணை, யாரும் திருமணம் செய்து கொள்ளவும் முன் வரவில்லை. செயற்கையாக ஒரு துறவு வாழ்க்கை அன்னபூரணியின் மேல் திணிக்கப்பட்டது.

ஒருபுறம் இளைய மகாராணி என்ற பிம்பம், மறுபுறம் சோத்துக்கே, அடுத்த வீட்டில் (சித்தியிடம்) கையேந்திக்கொண்டு தலைமறைவாக வாழும் அவல வாழ்க்கை. அன்ன பூரணியின் வாழ்க்கை, இருதலைக் கொள்ளி எறும்பாகிவிட்டது.

மருதப்பருக்கும், மீனாட்சி சுந்தர நாச்சியாருக்கும் பிள்ளைப்பேறுவேறு இல்லை. எனவே, மருதப்பர் யாராவது ஒரு சிறுவனைத் தனக்கு வாரிசாகத் தத்தெடுக்க நினைத்தார்.

ஏற்கனவே ரெண்டாந்தாரமாகக் கட்டிய மனைவி கன்னிப் பெண்ணாகக் கைநிமிர்ந்து நிற்கும்போது, அவளுடன் சேர்ந்து வாழாமல் சிறுவன் ஒருவனைத் தத்தெடுக்கக்கூடாது என்று அழகப்பத்தேவர் கோர்ட்டில் தடங்கல் மனு கொடுத்தார்.

மருதப்பர் எந்த நிலையிலும் அழகப்பத் தேவரின் எந்தக் கோரிக்கையையும் ஏற்க மறுத்தார். வாரிசு இல்லாத ஜமீன் சொத்துகளுக்கு தன் மகளே வாரிசு என்று அழகப்பத் தேவர் வாதாடினார்.

ஒரு புறம் தன்னைப் பெற்றெடுத்த தந்தை ஜமீன் சொத்துகளை அடைய வேண்டித் தன்னைப் பகடைக் காயாக வைத்து விளையாடுகிறார்;மறுபுறம் அறியாத வயதில் தான் கொடுத்த வாக்கிற்காகப் பேருக்குத் தாலி கட்டிவிட்டு, தன் கணவரான மருதப்பரும், பாராமுகமாக இருந்துகொண்டு தன்னை நிராகரிக்கிறார். எனவே நம் இல்லற வாழ்வு கேள்விக்குறியாகிவிட்டது என்பதை உணர்ந்து கொண்ட அன்னபூரணம் தனியே இருந்து அழுது தன் தலைவிதியை நினைத்துக் கண்ணீர் சிந்தினாள். பெற்றவர், கணவர் என்ற இரு ஆண்களின் ஈகோவுக்குள் சிக்கி அப்பெண்ணின் வாழ்வு சிதைந்தது.

நீதி மன்றத்தில் சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் அடிக்கடி அன்னபூரணத்தம்மாளைச் சந்திக்கச் சென்றார்.

அவர்மூலம் கிறிஸ்தவ மதத்தைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் தெரிந்து கொண்டு, அன்னபூரணத்தம்மாள் ஒருநாள் கிறிஸ்தவ மதத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.

கிறித்தவ மதத்தில் சேர்ந்த அன்னபூரணத்தம்மாளின் பெயர் மேரி விக்டோரியாள் என்று மாற்றப்பட்டது. மன உளைச்சலின் உச்சக்கட்டத்தில் இருந்த அப்பெண், மதமாற்றத்திற்குப்பின், கன்னியாஸ்திரியாகித் துறவறம் பூண்டார்.

மகள் மதம் மாறியதால், மனம் உடைந்த அழகப்பத் தேவரும் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்து விடுகிறார்.

அன்னபூரணத்தம்மாளின் இந்த அவலக் கதையை எனக்கு வாய்மொழியாக வீரகேரளம்புதூரைச் சேர்ந்த இரா..விநாயகம் பிள்ளை என்ற கதை சொல்லி கூறினார். தற்போது அவர் உயிரோடு இல்லை